![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவையில் ஒன்றரை வயது பெண் குழந்தை சந்தேகமான முறையில் உயிரிழப்பு - கணவனை பிரிந்து வாழும் மனைவியிடம் போலீஸ் விசாரணை
குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திருமணம் கடந்த உறவு காரணமா? அல்லது எதிர்பாராத விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![கோவையில் ஒன்றரை வயது பெண் குழந்தை சந்தேகமான முறையில் உயிரிழப்பு - கணவனை பிரிந்து வாழும் மனைவியிடம் போலீஸ் விசாரணை One and a half year old child mysteriously death in Coimbatore கோவையில் ஒன்றரை வயது பெண் குழந்தை சந்தேகமான முறையில் உயிரிழப்பு - கணவனை பிரிந்து வாழும் மனைவியிடம் போலீஸ் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/21/cd71ceb8ebbbc61b097579b86936a176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை கருமத்தம்பட்டி அருகே மர்மமான முறையில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திருமணம் கடந்த உறவு காரணமா? அல்லது எதிர்பாராத விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக இளங்கோவன் தனது மனைவியான சசிகலாவை அழைத்துக் கொண்டு வேலை தேடி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு அறிமுகமான செந்தில்குமார் என்பவர் வேலை வாங்கித் தருவதாக கூறி, இருவரையும் தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.
இளங்கோவன் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பத்து ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழும் செந்தில் குமாருக்கும், சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இளங்கோவனுக்கு தெரிய வந்ததை அடுத்து, மனைவி சசிகலாவுடன் சண்டை போட்டு விட்டு தன் ஆண் குழந்தையை அழைத்து கொண்டு கோத்தகிரிக்கு சென்று விட்டார். இதையடுத்து சசிகலா தனது பெண் குழந்தை மற்றும் இளங்கோவனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இளங்கோவனும் சசிகலாவும் மாலை வேளைகளில் ஒன்றாக அமர்ந்து குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை இருவரும் ஒன்றாக சேர்ந்து குடித்துள்ளனர். அப்போது குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்த நிலையில் குழந்தை கீழே விழுந்ததாகவும், அதனால் குழந்தை பேச்சு மூச்சில்லா மல் போனதாகவும் கூறப்படுகிறது. குழந்தையை எடுத்துக்கொண்டு சசிகலா பதுவம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருப்பதைப் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்புக்கு திருமணம் கடந்த உறவு காரணமா? விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)