![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவை கார் வெடிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட 5 பேரிடம் என்ஐஏ 2ஆவது நாளாக விசாரணை
5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
![கோவை கார் வெடிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட 5 பேரிடம் என்ஐஏ 2ஆவது நாளாக விசாரணை Nia officials interrogate 5 arrested in Coimbatore car blast case for second day TNN கோவை கார் வெடிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட 5 பேரிடம் என்ஐஏ 2ஆவது நாளாக விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/21a2b91a65778e4ffff32ab79a4312f21672042735046188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 43 இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. மேலும் ஜமேசா முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது. மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக் (39), உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ் கான் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பேரோஸ்கான் ஆகிய 5 பேரை மட்டும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் 5 பேரையும் கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று உக்கடம், ஜி.எம். நகர், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 5 பேரின் வீடுகளிலும் 5 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்பு நகர் பகுதியில் 5 பேரையும் அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் புருக் பீல்ட் மால் பார்க்கிங் பகுதிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கை தேவாலய தாக்குதலில் கைதாகி கேரள சிறையில் உள்ள முகமது அசாருதின் வீடு அமைந்துள்ள பகுதியிலும் 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)