![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.
![கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி Motorists suffer due to traffic disruption due to flooding in Noyal river கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/d7cf9c58fc39fd9da3b41740171ccfb61657807626_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையால், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி அணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்நிலையில் வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால் போக்குவரத்து தடைபட்டு வந்தது. இதையடுத்து அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சாலை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் வானக போக்குவதரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விரைந்து உயர்மட்ட பால கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல ஓண்டிபுதூர் - பட்டணம் சாலையில் தரைமட்ட பாலம் அகற்றப்பட்டு, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அருகே உள்ள நொய்யல் ஆற்றின் தடுப்பணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வெள்ள நீரில் இருந்து வெள்ளை நிற நுரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நுரை காற்றில் பரவி அருகாமையில் உள்ள பகுதிகளுக்கும் பறந்து செல்கிறது. நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலந்து வருவதால் நுரை வருவதாகவும், இதேபோல மழைக்காலங்களில் வரும் நுரை வருவது வழக்கம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)