![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Minister Udhayanidhi Stalin : ’நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை..
”நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். இந்த முறை 40க்கு 40 தொகுதியையும் வென்றெடுப்போம். நாற்பதும் நமதே நாடும் நமதே.”
![Minister Udhayanidhi Stalin : ’நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை.. Minister Udhayanidhi Stalin is confident that we will win all 40 constituencies in the parliamentary elections Minister Udhayanidhi Stalin : ’நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/21ead739d5a81a980b91be504227c0bf1678032907055188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை கொடிசியா மைதானத்தில் 2000 திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழிகளை வழங்கினார். பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”கலைஞர் அறக்கட்டளையில் 4 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைத்து, அதில் வரும் வட்டி தொகையை மாதம் தோறும் கழக மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4078 பேருக்கு 5 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 20,000 பேருக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே எந்த கட்சியும் செய்யாத முயற்சி இது. பிற மாவட்ட செயலாளர்கள் எல்லாம் பொறாமை படுகின்ற அளவிற்கு செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். கல்வி செலவு மற்றும் மருத்துவ செலவிற்கென இந்த ஒரு மாதத்தில் மட்டும் 70 பேருக்கு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம் செய்யும்போதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கவேண்டாம். பட்டாசுகள் வெடிக்க வேண்டாம். ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம். பூங்கொத்துகள் வேண்டாம். பொன்னாடைகள் அணிவிக்க வேண்டாம். தங்களால் முயன்ற தொகையை இளைஞர் அணி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தாருங்கள். தாங்கள் கொடுக்கின்ற நீதி கடைக்கோடி தொண்டன் இடத்தில் சேரும்.
சட்டமன்றத் தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இருந்தாலும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆறு முறை கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்கும் போது எதிர்க்கட்சியினர் திமுக அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்கள். முதலமைச்சர் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். பத்தாண்டு காலம் இருந்த அதிமுக ஆட்சி கஜானாவை காலி செய்து 5 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து சென்றது. கோவை அதிமுகவின் கோட்டை அல்ல, திமுகவின் கோட்டைதான் என நிரூபித்து காட்டியது தான் கடந்த உள்ளாட்சித் தேர்தல்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அங்கேயே குடியிருந்தார். ஆனால் நம்முடைய முதலமைச்சர் ஒரு நாள் தான் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை கிழக்கு தொகுதி மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போது தேர்தல் முடிந்து விட்டது அதிமுகவினர் ஒருவர் கூட வெளியில் வரமாட்டார்கள். அதிமுகவினர் கட்சியில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மட்டும் வெளியில் வருவார்கள்.
ஜெயலலிதா இறந்த பிறகு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கூட்டு களவாணிகளாக இருந்தார்கள். ஆட்சியில் இருக்கின்ற வரை நீ முதலமைச்சர், நான் துணை முதலமைச்சர் நீ ஒருங்கிணைப்பாளர் நான் துணை ஒருங்கிணைப்பாளர் என கூறி வந்தார்கள். இருவரும் கமலாலயம் வாசலில் காத்துக் கொண்டிருந்தார்களா? இல்லையா?, ஏனென்றால் அவர்கள் பாஜகவின் அடிமைகள். பாஜகவின் கண் அசைவு இல்லாமல் அதிமுகவில் எதுவும் நடக்காது.
இங்குள்ள ஆளுநர் அவரது இஷ்டபடி சிலவற்றை நீக்கி விட்டும் சிலவற்றை சேர்த்தும் பேசினார். அப்போது நம்முடைய முதலமைச்சர் தைரியமாக எழுந்து நின்று ஆளுநரிடம் நீங்கள் கூறியது எல்லாம் சட்டப்பேரவையில் ஏறாது. உங்கள் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வருகிறேன் என தெரிவித்த போது ஆளுநருக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் ஆளுநர் எழுந்து சென்றார். அதற்கு முன்பு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் பயந்து எழுந்து சென்றார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் அந்த கூட்டணி உறுதியான பின்பு தான் நமது வெற்றியும் உறுதியானது. அந்த அளவிற்கு பாஜகவை தமிழக மக்கள் வெறுக்கிறார்கள். இது போன்ற வெறுப்பு அரசியல் செய்தால் மக்கள் என்றென்றும் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாஜக என்பது ஆடியோ வீடியோ கட்சி. அங்கு இரண்டு தரப்பினர் இருந்து கொண்டு வெளிப்படையாக ஒருவருக்கொருவர் மிரட்டி கொள்வார்கள், இப்படிப்பட்ட கட்சியை எங்கேனும் பார்த்து உள்ளீர்களா?. பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்வோர், தனக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை எனக்கு சீட்டு வழங்கவில்லை என தான் என்றுதான் கூறுவார்கள்.
இன்று பாஜகவில் இருந்து விலகிச்சென்ற பொறுப்பில் இருக்கும் ஒருவர் கட்சியின் தலைவரை, எங்களுடைய தலைவர் ஒரு 420, பாஜகவின் தலைவர் மன நலம் குன்றியவர் எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில், தமிழர்களாகிய நாம் எல்லாம் வட மாநிலத்தவர்களை விரட்டுகின்றோம் என பொய் பரப்புகிறார்கள். இது போன்ற பொய் பரப்பவும் நபர்களுக்கு சரியான நேரத்தில் முதலமைச்சரும் மக்களும் அடிதருவார்கள். வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார். அதற்காக இன்றிலிருந்து நாம் செயல்படுவோம். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். இந்த முறை 40க்கு 40 தொகுதியையும் வென்றெடுப்போம். நாற்பதும் நமதே நாடும் நமதே. நான் என்றும் உங்களுடைய செல்லப் பிள்ளையாகவும் பேர பிள்ளையாகவும் இருந்து பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)