![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
‘10 ஆண்டு செய்யாததை 6 மாதத்தில் செய்து முடித்த முதல்வர்’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
”கடந்த காலங்களில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாததால், பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல், கடந்த ஆட்சியில் செய்யாத பணிகளை 6 மாதத்தில் முதல்வர் செய்து விடுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.”
![‘10 ஆண்டு செய்யாததை 6 மாதத்தில் செய்து முடித்த முதல்வர்’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி Minister Senthil Balaji said that the Chief Minister of Tamil Nadu will do the work that was not done during the 10 year rule in 6 months ‘10 ஆண்டு செய்யாததை 6 மாதத்தில் செய்து முடித்த முதல்வர்’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/3dda8bb4fa527efe9bc7b57ea37444aa_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் முழுவதும் பொது மக்களை சந்தித்து தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் சரவணம்பட்டி 28 வது வார்டு விமல் ஜோதி பள்ளியில் இன்று மக்கள் சபை நிகழ்ச்சி துவங்கியது. இதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பி நகர், பூந்தோட்டம் நகர், கணபதி, மணியகாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு உள்ளிட்ட ஒரே நாளில் 10 வார்டுகளில் தனி தனியாக மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் மக்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெற்றார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 44 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 27374 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. இன்று 10 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில், சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
வெள்ள பாதிப்புகள் தொடர்பான எதிர்கட்சிகள் குற்றாச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, ”கடந்த மே 7 ந்தேதி முதல்வர் பொறுப்பேற்றார். அப்போது கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்தது. அதை எதிர்கொண்டு, தமிழகத்தை 2 மாதத்தில் மீண்டெடுத்தார் தமிழக முதல்வர். கடந்த காலங்களில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாததால், பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல், கடந்த ஆட்சியில் செய்யாத பணிகளை 6 மாதத்தில் முதல்வர் செய்து விடுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கடந்த கால ஆட்சியில், போடப்பட்ட துணை மின் நிலையங்கள், தாழ்வான இடங்களில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது” என அவர் பதிலளித்தார். இந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)