வழி தவறி வந்த புள்ளி மான்… நாய்கள் கடித்து கால் உடைப்பு...
கோவை பெரியதடாகம் பகுதியில் வழி தவறி வந்த புள்ளி மான் நாய்கள் கடித்ததில் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்து காயப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மானை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து மீட்டு சிகிச்சைக்காக அனுப்பினர்.
கோவை அருகே உள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவ்விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது மலை அடிவார குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று பகல் நேரத்தில் வனப்பகுதியில் இருந்து ஒரு புள்ளி மான் வழி தவறி பெரியதடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது. அப்போது அங்கிருந்த நாய்கள் கூட்டமாக அந்த மானை சுற்றி வளைத்து கடித்ததாக கூறப்படுகிறது. இதில் மானின் ஒரு கால் கடுமையாக காயமடைந்து உடைந்துள்ளது.
படுகாயமடைந்த மான் ஓட முடியாமல் அருகில் இருந்த ஒரு வீட்டின் வளாகத்துக்குள் சென்று தஞ்சமடைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயமடைந்த புள்ளி மானை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தற்போது மானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டு விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















