தென்கயிலாயம் வெள்ளியங்கிரி மலையில் அதிர்ச்சி – மலையேற்றத்தின் போது உயிரிழந்த பக்தர்
கோவை வெள்ளியங்கிரி மலையில் விபரீதம். மலையேற்றத்தின் போது பக்தர் உயிரிழப்பு - உடலை மீட்க வனத்துறை நடவடிக்கை.

தென்கயிலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட முதல் மலைப் பாதையில் உள்ள குரங்கு பாலம் அருகே நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் பக்தர் ஒருவர் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்தவர் கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்பது தெரியவந்தது.
மலையேற்றத்தில் உடல்நலக்குறைவு
மலையேற்றத்தின் போது செங்குத்தான பாதையில் ஏறிக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் நிலைதடுமாறி சரிந்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் வனத்துறை பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமைப் பணியாளர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மீட்பு பணியை தொடங்கினர்.
ஆனால், அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை டோலியில் கட்டி, கடினமான மலைப்பாதை வழியாக பூண்டி அடிவாரம் நோக்கி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடைக்காலம் தொடங்கியதால் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மலையேற்றத்தின் போது பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















