![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாா்.
![Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு Coimbatore: young woman died without treatment after her boyfriend set her on fire after forcing her to marry him TNN Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/05/755cca44486abce82148729e3e1f5bbe1672912162453188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாா். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தீக்காயங்களுடன் இருந்த இளம்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே பெண்ணின் மீது தீ வைத்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற வாலிபர் தவறி விழுந்து காயமடைந்தாா். அவரை காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண்ணுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீ வைக்கப்பட்ட பெண் மும்பையை சோ்ந்த பூஜா (வயது 19) என்பதும், தாய்-தந்தையை இழந்த அவர் பல்லடம் ராயா்பாளையம் பகுதியில் உள்ள உறவினா் இப்ராகிம் என்பவா் வீட்டில் தங்கி அருகே உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. வேலைக்கு சென்ற இடத்தில் ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (22) என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பல்லடம் பனப்பாளையம் பெத்தாம்பாளையம் சாலையில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த லோகேஷ் கல்லால் பூஜாவை தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் பூஜா அலறியபடி சாலைக்கு ஓடி வந்துள்ளாா். இதனைக் கண்ட லோகேஷ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து காயமடைந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பல்லடம் காவல் துறையினர் லோகேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் லோகேஷ் குணமடைந்த பிறகு காவல் துறையினர் கைது செய்யவும், அதன் பிறகு திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீ வைத்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். காதலனால் இளம்பெண் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)