மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சாலையில் படுத்து உருண்டு எதிர்ப்பு தெரிவித்த வேட்பாளர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில், தேர்தல் தொடர்பான பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, தேர்தல் அதிகாரியிடம் கடுமையாக முறையிட்டார். தனது மனு திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாகவும், தன்னிடம் அநீதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோதும், தெளிவான பதில் வழங்கப்படவில்லை என ஜெயராஜ் குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கோவை சிறுவாணி சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பதற்றமான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ஜெயராஜை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என்றும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு, அந்த தொகுதியில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.























