மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை மருதமலை கோவிலில் நாளை முதல் செல்போன் தடை – அமைதியாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அறிவிப்புமருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நாளை (10.03.2026) முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருதமலை தரிசனத்திற்கு புதிய விதி
முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவில் வளாகத்தில் அமைதியான சூழலை நிலைநிறுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, வருகிற 10.03.2026 முதல் ராஜகோபுரம் நுழைவாயில் முதல் ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசாமி சன்னதி, பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை ஸ்விட்ச் ஆஃப் செய்து கொண்டு வர வேண்டும் என்றும், கோவில் வளாகத்தில் செல்போனில் பேசுதல், புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ பதிவு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.























