![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime : கோடநாடு வழக்கில் 6 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேரிடம் சி.பி.சி.ஐ. டி போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
![Crime : கோடநாடு வழக்கில் 6 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை Cbcid police interrogated 6 people in connection with Kodanadu case in Coimbatore TNN Crime : கோடநாடு வழக்கில் 6 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/80592f2bcc525dc44b4dcb6fd86f82ca1671518877001108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே இவ்வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய தனிப்படை காவல் துறையினர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்களை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலிசார் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் கோடநாடு சம்பவம் நடைபெற்ற போது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தது தொடர்பாக மணிகண்டனுக்கும், சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைக்காக கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய மூன்று பேரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன்படி 3 பேரும் நேற்று காலை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகினர். ஆஜராகிய மூன்று பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல மதியத்திற்கு மேல் தலைமை காவலர் ஜேக்கப், உதவி ஆய்வாளர் அர்ஜுனன், எஸ்டேட் கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமும் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொருவரிடமும் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். தொடர்ந்து விசாரணைக்கு பின்பு கர்சன் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “கோடநாடு எஸ்டேட் வழக்கில் எனக்கு மூன்றாம் தேதி சமன் கொடுத்தார்கள். ஏழாம் தேதி இன்று என்னை ஆஜராக சொன்னார்கள். கேள்வி கேட்டார்கள். நான் பதில் சொன்னேன். முதன் முறையாக தான் நான் வருகிறேன். 3 மணி நேரம் எனக்கு விசாரணை நடைபெற்றது. அவர்கள் கூறியதை சொல்ல கூடாது என தெரிவித்துள்ளார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)