![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவையில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளின் கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு - தொடரும் பதற்றம்
கோவை பாஜக அலுவலகம் மற்றும் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், பொள்ளாச்சியில் பாஜக இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.
![கோவையில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளின் கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு - தொடரும் பதற்றம் Car and auto mirrors of Bjp and Hindu Front executives broken in Coimbatore TNN கோவையில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளின் கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு - தொடரும் பதற்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/23/54639856f6d0c506be3e227fe71c929c1663901471971188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பாஜக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தினசரி வந்து செல்வது வழக்கம். பாதுகாப்பு காரணங்களுக்காக 24 மணி நேரமும் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்தது. அதேசமயம் பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த வந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வெடிக்காத பெட்ரோல் குண்டு மற்றும் பாஜக அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச்சிற்கான காரணம் மற்றும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பா.ஜ.க நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் மற்றும் சிவாவின் கார் கண்ணாடிகளை கோடாரியால் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரது இரண்டு ஆட்டோ கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறித்து வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இச்சம்பங்கள் குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், அச்செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)