குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
கோவையில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், வடவள்ளி அருகே உள்ள ஓணம்பாளையம் பகுதியில் கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நகரமான கோவையில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓணம்பாளையம் பகுதியில், வெளிமாநில தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பீகார் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் கஞ்சா செடி
இந்த பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வடவள்ளி காவல்துறையினர் அந்த இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் சுமார் 4 அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக அந்தச் செடியை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் தங்கி இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்தச் செடியை யார் வளர்த்தது, தனிப்பயன்பாட்டிற்காகவா அல்லது விற்பனை நோக்கத்திற்காகவா வளர்க்கப்பட்டது, மேலும் அந்த பகுதியில் வேறு போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை நகரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் காவல்துறையின் கண்காணிப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்பதைக் காட்டுவதாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.























