Vinayagar Chaturthi 2025: சென்னையில் விநாயகர் சிலைகளை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? - போலீஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுரை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபாடு செய்ய காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

27 ம் தேதி விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ஆண்டு தோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று இவ்விழா கோலாகலாமாக கொண்டாடப்படும். இந்த நாளில் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
காவல் துறை - ஹிந்து அமைப்பினர் கலந்தாய்வு கூட்டம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு ஹிந்து அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திக்கேயன் உள்ளிட்ட அதிகாரிகளும், ஹிந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க பாரத் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்காக போலீசார் தரப்பில் வழங்கப்பட்ட அறிவுரைகள் ;
விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
தீயணைப்புத்துறை , மின்வாரியம் , ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து , அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க உறுதியளித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
நிறுவப்படும் சிலை யின் உயரம் , அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
பிற வழிபாட்டுத் தலங்கள் , மருத்துவம்னைகள் , கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.
சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை , 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை கரைக்க , காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் , அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.
விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள் , ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.
என , இது போன்ற அறிவுரைகளை காவல் துறையினர் இந்த கூட்டத்தில் வழங்கியுள்ளனர்.





















