வண்டலூரில் சனிக்கிழமை சர்ப்ரைஸ்! கையில் வண்ணத்துப்பூச்சியோடு போட்டோ எடுக்க சூப்பர் வாய்ப்பு – பூங்கா நிர்வாகம் அழைப்பு!
Vandalur Zoo: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் (AAZP) மிக முக்கியமான மற்றும் மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஈர்ப்புகளில் ஒன்றாக வண்ணத்துப்பூச்சி பூங்கா விளங்கி வருகிறது. தற்போது இப்பூங்கா மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, இயற்கைச் சூழல் அம்சங்கள் மற்றும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வண்ணத்துப்பூச்சிகளுக்கும், பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கும் மேலும் சிறப்பான மற்றும் பயனுள்ள அனுபவம் கிடைக்கும் வகையில் பூங்காவின் சூழல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை சூழலுடன் கூடிய வடிவமைப்பு
இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா ஓட்டேரி ஏரிக்கு அருகில் 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் முழுமையான வாழ்க்கைச் சுழற்சியை ஆதரிக்கும் வகையில் இப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கம், உணவூட்டம் மற்றும் வாழிட மேம்பாட்டிற்கு ஏற்ற தாவரங்களைக் கொண்ட பிரத்யேக ஊட்டுத் தாவரத் தோட்டங்கள் மற்றும் தேன் வழங்கும் மலர்த் தோட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
கம்பளிப்புழு வடிவில் பாதுகாப்புக் கூடம்
இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக, கம்பளிப்புழுவின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள உட்புற வண்ணத்துப்பூச்சி பாதுகாப்புக் கூடம் விளங்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளின் சுவாரஸ்யமான வாழ்க்கைச் சுழற்சி, நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், இக்கூடத்தில் புழு மற்றும் கூட்டுப்புழு வளர்ப்பு அறைகள் மற்றும் விளக்க மையமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
நவீனமயமாக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பார்வையாளர் வசதிகள்
சமீபத்திய புதுப்பிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, வண்ணத்துப்பூச்சி பூங்காவின் உள்கட்டமைப்பு மற்றும் பார்வையாளர் வசதிகளில் பல்வேறு குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்புக் கூடத்தில் புதிய பாலிகார்பனேட் தாள்கள் பொருத்தப்பட்டு, பல்வேறு வண்ணத் தோற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை மாறுபட்ட ஒளி நிலைகளை உருவாக்குவதுடன் பார்வையாளர்களின் காட்சியனுபவத்தையும் பெருமளவில் மேம்படுத்துகின்றன. மேலும், ஏற்கனவே இருந்த கைப்பிடி கம்பிகள் அகற்றப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக மூங்கில் கைப்பிடிகள் பொருத்தப்பட்டு இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுடன் ஒருங்கிணைந்த தோற்றம் வழங்கப்பட்டுள்ளது.
உட்புற வண்ணத்துப்பூச்சி பாதுகாப்புக் கூடத்தைச் சுற்றியிருந்த பழைய வலைச் சுவர்கள் அகற்றப்பட்டு, துருப்பிடிக்காத ஸ்டீல் வலைகளால் மாற்றப்பட்டதன் மூலம் பூங்காவின் நீடித்த தன்மையும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல, பூங்காவிலுள்ள நீரூற்றுகள் புதுப்பிக்கப்பட்டு இயற்கை காட்சியமைப்பு மற்றும் நுண்ணிய சுற்றுச்சூழல் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் புகைப்பட இடங்கள்
பூங்காவின் விளக்க மையம் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட காட்சிப்படுத்துதல்கள் மற்றும் சுய கற்றல் கியோஸ்க்குகள் (Self-learning kiosks) அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்கள் பல்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியைப் புரிந்து கொள்ளவும், தங்களுக்கென மெய்நிகர் (Virtual) வண்ணத்துப்பூச்சிகளைச் சொந்தமாக வடிவமைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பூங்கா முழுவதும் சுவரோவியங்கள் வரையப்பட்டு, வண்ணமயமான மற்றும் இயற்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் அழகிய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்களது வண்ணத்துப்பூச்சி பூங்கா அனுபவத்தைப் புகைப்படமாகப் பதிவு செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இரண்டு புதிய புகைப்பட இடங்கள் (Selfie Points) புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்கு அழைப்பு மற்றும் சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி
புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவின் மூலம் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே மேம்படுத்துவதுடன், பார்வையாளர்களின் நேரடி மற்றும் செயல்வழி பங்கேற்பையும் ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11:30 மணிக்கு, விடுவிக்கத் தகுந்த கையால் வளர்க்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் கிடைக்கும் நிலையைப் பொறுத்து, 'வண்ணத்துப்பூச்சி விடுவிப்பு நிகழ்ச்சி' நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவைக் கண்டுகளித்து, இந்தச் சிறப்பு நிகழ்ச்சியிலும் ஆர்வமுடன் பங்கேற்குமாறு பூங்கா நிர்வாகம் சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்





















