மக்களுக்கு குட் நியூஸ் !! இருப்பிடச் சான்று இலவசம் !! எப்போது வரை தெரியுமா ?
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சரிபார்ப்பு தேவை உள்ள நபர்களுக்கு, இ - சேவை மைய கட்டணம் இல்லாமல், 'மேனுவல்' முறையில், இருப்பிடச் சான்று வழங்க உத்தரவு

மேனுவல் முறையில் இருப்பிடச் சான்று
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சரிபார்ப்பு தேவை உள்ள நபர்களுக்கு, இ -சேவை மைய கட்டணம் இல்லாமல், 'மேனுவல்' முறையில், இருப்பிடச்சான்று வழங்க, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர் 4 -ல் துவங்கியது. முதற்கட்டமாக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு கடந்த 19 - ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சரியான ஆவணங்கள் வழங்க நோட்டீஸ்
ஆவணங்கள் கணக்கெடுப்பு படிவத்தில் , விண்ணப்பதாரர் பெயர், 2002, 2005 ஆண்டு நடந்த, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, எந்த தொகுதியில் இருந்தது என்ற விபரம் கேட்கப்பட்டிருந்தது. அந்த விபரங்களை அளிக்காத வாக்காளர்களின் பெயர் , வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்களிடம் உரிய ஆவணங்களை பெறும் படி, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில், அவர்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் தேவைப்படுகிறது. அவர்களுக்கு சலுகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, வருவாய் துறை செயலர் அமுதா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது ;
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், வாக்காளர்கள் அல்லது உறவினர்களின் பெயர்கள், 2002, 2005 ஆண்டு பட்டியலில் இல்லாதவர்களுக்கு, இருப்பிட சான்றிதழ் அவசியமாகிறது.
இதை பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பதில், மண்டல துணை தாசில்தார்கள், தாலுகா தலைமையிட துணை தாசில்தார்கள் ஆகியோரிடம், நேரடியாக சென்று, இருப்பிட சான்று பெறலாம்.
இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் போது, 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். நேரடியாக வரும் போது, அந்த கட்டணத்தை பெற வேண்டாம்.
நேரில் வருவோருக்கு, விரைவாக இருப்பிட சான்று வழங்குவதற்காக, இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜனவரி 25 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















