வேலூர்-காஞ்சிபும்-சென்னை RRTS ரயில்: அதிவேகப் பயணம்! சர்வே தொடக்கம்! விரைவில் சாத்தியக்கூறு!
Vellore RRTS Train Latest Update: " சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூர் வரை அமைக்கப்படவுள்ள, ஆர்.ஆர்.டி.எஸ் ரயில் திட்டத்திற்கு சர்வே எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன"

Chennai - kanchipuram - Vellore RRTS Train: ஆர்.ஆர்.டி.எஸ் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளனர். இந்த ரயில் சேவை வழித்தடம் அமைப்பதற்கான, சர்வே எடுக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக அதி தகவல் வெளியாகியுள்ளது.
வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டில் நகரங்கள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கக்கூடிய சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. இதனால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், குடி பெயர்ந்து வசிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களிலும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நகரங்களுக்கு பொது போக்குவரத்து சேவையை அதிகரிக்கும், கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு - Regional Rapid Transit System (RRTS)
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு, அதிவிரைவு பொது போக்குவரத்து சேவை இன்றியமையாததாக இருந்து வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, புதுடெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, தமிழ்நாட்டிலும் முக்கிய நகரங்களில் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை உருவாக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது
சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் மண்டல போக்குவரத்து ரயில் ( Chennai - Vellore RRTS Train )
சென்னைக்கு அருகே இருக்கும் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக வேலூர் இருந்து வருகிறது. வேலூரில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு பல்வேறு தேவைக்காக வந்து செல்கின்றனர். வேலூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், பெரும்பாலானோர் சாலை மார்க்கமாக வரவேண்டிய சூழல் உள்ளது. சாலை மார்க்கமாக பொது போக்குவரத்து மூலம் வேலூரில் இருந்து சென்னை வரவேண்டும் என்றால், 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, கூடுதலாகவும் நேரத்தை எடுத்துக் கொள்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சர்வே எடுக்கும் பணி தொடக்கம்
இந்தநிலையில் சென்னையிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேலூருக்கு, ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி சாத்திய கூறுகள் தயாரிப்பதற்கான "டெண்டர்" விடப்பட்டது.
கடந்த ஜூலை மாதம்-03 தேதி "பாலாஜி ரயில் ரோடு" என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்காக ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த ரயில் அமைப்பதற்காக சர்வே எடுக்கும் பணியும் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அறிவித்ததில் இருந்தே தொடர்ந்து, இந்த ரயில் சேவை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த ரயில் சேவை அமைப்பதற்கான சாத்திய கூறு தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Key Features of Vellore - Chennai RRTS சிறப்பம்சங்கள் என்னென்ன?
மெட்ரோவை விட வேகமாக செல்லக்கூடிய ரயில் போக்குவரத்து அமைப்பாக இந்த அமைப்பு இருக்கும். இந்த ரயில் வழித்தடம், ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் ரயில்கள் சுமார் 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்திற்கு இயக்கப்படும். இந்த ரயில் வழித்தடம் மூலம் பரந்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த ஊரை இணைக்கும் ?
இந்த ரயில் சேவை சென்னையில் தொடங்கி, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், பரந்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை வழியாக வேலூர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வே எடுக்கும் பணி நிறைவடைந்து, முழுமையான சாத்திய கூறு தயாரித்த பின்னரே எந்தெந்த இடங்களில் ரயில் நிலையம் வரும், எந்த வழி என்பது உறுதியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















