Chennai Accident: சென்னையில் நடந்த துயரம்.. அசாமைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு
Chennai Accident: எண்ணூர் துறைமுக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Chennai Accident: எண்ணூர் துறைமுக விபத்தில் உயிரிழந்த 9 பேருமே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “சென்னையில் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த துயரச் சம்பவம் என்னை மிகுந்த வருத்தமடையச் செய்தது. இந்த கடினமான வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் என் ஆழ்ந்த அனுதாபங்களும் எண்ணங்களும் இணைந்துள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி நான் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், “ எண்ணூரில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் சிவசங்கர் மற்றும் TANGEDCO தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை
உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்” என தெரிவித்து இருந்தார்.
அசாமைச் சேர்ந்த 9 பேர் பலி - நடந்தது என்ன?
சென்னை அடுத்த எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி, 45 அடி உயரத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இதில் சிக்கி வடமாநில தொழிலாளர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திடம் விசாரிக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அசாம் முதலமைச்சர் இரங்கல்
விபத்து தொடர்பாக அசாம் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், ”வட சென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அசாமைச் சேர்ந்த 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் உடல்களை விரைவில் கொண்டு வருவதற்கு நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வருகிறோம். அவர்களது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்து இருந்தார்.





















