புதிய பத்திரப் பதிவு திட்டம் ; அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவுத் துறை திடீர் உத்தரவு !!
அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கான பத்திரத்தை பதிவு செய்யும் போது, கள ஆய்வு செய்ய வேண்டாம் என பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது

ஸ்டார் 3.0 திட்டம் அமல்
தமிழகத்தில் பத்திரப் பதிவு பணிகளை விரைவு படுத்த ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் குறிப்பிட்ட சில பரிமாற்றங்களுக்கு சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்து வேண்டுமானாலும், பத்திரப்பதிவு செய்யலாம்.
குறிப்பாக புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதற்கான பத்திரப் பதிவு பணிகளை கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்தபடியே மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பத்திரத்தில் தொடர்புடைய, கட்டடத்தின் மதிப்பு சரியாக இருப்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து, அடுக்குமாடி திட்ட வீடுகள் தொடர்பான, இரண்டாவது மற்றும் தொடர் விற்பனையின் போது, கள ஆய்வு செய்யாமல், பத்திரப் பதிவு செய்து கொடுக்க, பதிவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. கள ஆய்வு தவிர்த்து, கால தாமதமின்றி பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழகப் பிரிவு துணைத் தலைவர் பி. மணிசங்கர் கூறியதாவது ;
பதிவுத் துறை உத்தரவில் நன்மை, தீமை இரண்டும் உள்ளது. நன்மை என்றால், அடுக்குமாடி திட்டங்களில், சிறப்பு வசதிகள் குறித்த விபரங்கள் பத்திரத்தில் இடம் பெற்றால், கள ஆய்வு வேண்டாம் என்பது வரவேற்கத்தக்கது. இதனால், பதிவு முடிந்தவுடன் பத்திரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அடுக்குமாடி குடியிருப்புகளில், கட்டுமான நிறுவனம், வீடு வாங்குவோர் இடையிலான உடன்பாட்டுக்கு மதிப்பு கிடைக்கும்.
தீமை என்றால் , கள ஆய்வு மேற்கொள்ளாத நிலையில், அந்த திட்டத்தில் அனுமதித்ததை விட, கூடுதல் வீடுகள் கட்டப்பட்டு இருந்தால் அது தெரிய வராது. பத்திரத்தில் குறிப்பிட்ட 'லிப்ட், பார்க்கிங்' வசதிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த , வாய்ப்பு இல்லாமல் போகும். உண்மையில் அப்படி ஒரு கட்டடம் தற்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு, பதிவுத் துறையால் பதில் அளிக்க முடியாத நிலை ஏற்படும் என இவ்வாறு அவர் கூறினார்























