![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madras Eye: தமிழகத்தில் இந்த மாவட்டங்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ.. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட திடுக் ரிப்போர்ட்..
தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
![Madras Eye: தமிழகத்தில் இந்த மாவட்டங்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ.. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட திடுக் ரிப்போர்ட்.. more than one lakh people are affected by madras eye in TN minister ma.subramanian says Madras Eye: தமிழகத்தில் இந்த மாவட்டங்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ.. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட திடுக் ரிப்போர்ட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/f26a23c5ad9101aeab01596ec25c1e14_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கண் வெண்படல அழற்சி என்று அழைக்கப்படும் 'மெட்ராஸ் ஐ’ தொற்று கான்ஜுன்க்டிவிடிஸ்/ கண்சவ்வில் ஏற்படும் பிரச்னையாகும். பொதுவாக மழைக்காலத்தில் சென்னையில் பரவலாக இந்தத் தொற்று ஏற்படுகிறது.
குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மத்தியில் மெட்ராஸ் ஐ தொற்று வேகமாகப் பரவும் சூழலில், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், காலனிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் மெட்ராஸ் ஐ நோய்த்தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பரவல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் பாதிப்பு கூடுதலாகி வருகிறது.
சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசு சார்பில் 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது. எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் உள்ளிட்ட பத்து இடங்களில் கண் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது இந்த 10 இடங்களில் நாளொன்றுக்கு 80 -100 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள்.
இதுவரையும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் 1.5 லட்சம் பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது ஆனால் தற்போது வரையிலும் ஒருவருக்கு கூட கண்பார்வை இழப்பு ஏற்படவில்லை.
நோய் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, அலுவலகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் சுய சிகிச்சை செய்யக்கூடாது. முறையான கண் மருத்துவர் அணுகி அவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
நவம்பர் இறுதியில் இருக்கிறோம் டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இந்த நோய் பாதிப்பு படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தினமும் 600 முதல் 700 நோயாளிகள் மெட்ராஸ் ஐ மட்டுமல்லது வேறு கண் பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.
மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை, கண் மருத்துவத்தைப் பொறுத்தவரையில் போதுமான மருந்துகள் கை இருப்பில் உள்ளது எனவும் சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
அறிகுறிகள் :
மெட்ராஸ் ஐ என்பது ஒரு பொதுவான தொற்று ஆகும், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டநபரின் கண்ணில் இருந்து வெளியேறும் திரவத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெட்ராஸ் ஐ பரவுகிறது. இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது.
- மெட்ராஸ் ஐ தொற்றின் பொதுவான அறிகுறிகள்:
- கான்ஜுன்க்டிவிடிஸ் அரிப்பு உணர்வு.
- கண்கள் சிவத்தல்.
- கடுமையான எரிச்சலுடன் கண் சிவத்தல்.
- கண்ணின் வெள்ளைப் பகுதி, சிவப்பாக மாறுதல்
- வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசுதல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேற்றம்.
- கார்னியா பாதிப்பால் மங்கலான பார்வையும் ஏற்படலாம்.
- சில நோயாளிகளுக்கு கண் வீக்கம் ஏற்படும்.
மேலும், மெட்ராஸ் ஐ சிகிச்சைக்கு சுயமாக மருந்துகள் எடுப்பதைத் தவிருங்கள். உடனடியாக கண் மருத்துவர்களை அணுகுங்கள்.
இரண்டாம் நிலை நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு ஆண்டிபயாடிக்ஸ் வழங்கப்பட்டாலும், நோயாளிகள் தனிமைப்படுத்தப்படவும், போதுமான ஓய்வு எடுக்கவுமே வலியுறுத்தப்படுவார்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)