'தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஈபிஎஸ்’ என்ன காரணம்?
திமுகவினரின் அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக் கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன் - உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ஸ்டாலின் - EPS

இளம் பெண்கள் அரசியல்வாதிகளுக்கு இரை
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச் செயல் , இளம் பெண்களை கட்டாயப்படுத்தி அரசியல்வாதிகளுக்கு இரையாக்கி வருவதாக, பாதிக்கப்பட்ட மாணவி சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். புகாரை தொடர்ந்து , திமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அவர் மீது எடுக்கப்பட்டது.
கை துப்பாக்கியுடன் கவுன்சிலர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு உரிய அனுமதி இன்றி துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல் துறையினர் கைது செய்தனர்.
திமுகவினர் தொடர்ந்து , பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ;
அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி , அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில் , அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் , தான் திமுக அரசின் காவல் துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
காவல் துறை மிரட்டல்
திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச் செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான் - இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல் துறை மிரட்டுகிறது - திமுக இளைஞரணியின் ஏவல் துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.
ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் புழக்கம்
திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது.
போதை இளைஞரிடம் கத்தி- பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி , சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்து விட்டது .
இதைத் தானே , இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன் ? இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு MK ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது ?
உங்களுக்கு வெட்கமே இல்லையா ?
இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை. ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக் கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன் - உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ஸ்டாலின்.
ஏன் தெய்வச் செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக ? தெய்வச் செயலைக் காப்பாற்றுவதன் மூலம் , பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு - காக்கப்படுகிறதா ? அப்படியெனில் , #யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை , எங்கள் கேள்விகள் ஓயாது.
திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ஸ்டாலின் ? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு , ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப் போவது இல்லை.
நான் எப்போதும் சொல்வது போல , இந்த ஆட்சி முடியும் வரை , மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் - குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து.
என வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.





















