“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
சென்னை கோட்டை பகுதியில் இயங்கி வரும் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) சிறார் நகர் உயர்நிலைப்பள்ளி,100% தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று அசத்தியுள்ளார்.

சென்னை கோட்டை பகுதியில் இயங்கி வரும் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) சிறார் நகர் உயர்நிலைப்பள்ளி, சமுதாயத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இலவசக் கல்வியை வழங்கி வருகிறது. கூலித் தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், பூ விற்பனையாளர்கள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் இங்கு பயின்று வருகின்றனர். கடந்த 1947-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி திரு. லாரன்ஸ் சி. பர் என்பவரால் வீடற்றவர்களுக்கான இரவுப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி, தற்போது 79 ஆண்டுகளாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கல்விப் பணியாற்றி வருகிறது.
நவீனக் கல்வியும் இலவச வசதிகளும்
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கட்டணம் எதுவுமின்றி ஸ்மார்ட் போர்டு (Smart Board) வசதியுடன் கூடிய நவீனத் தொழில்நுட்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இலவச சீருடை, இலவசக் காலணி, இலவச உணவு, அடையாள அட்டை மற்றும் இலவசப் புத்தகப் பை போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளும் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன.
100% தேர்ச்சியும் பறந்த சர்ப்ரைஸும்
பள்ளியின் தாளாளரும் பொதுச் செயலாளருமான (C.E.O) ஆசீர் பாண்டியன், 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சியை எட்டினால், அனைவரையும் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை ஊக்கமாகக் கொண்டு உழைத்த மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று 100% தேர்ச்சியைச் சாதனை படைத்தனர். மாணவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், தாளாளர் ஆசீர் பாண்டியன் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, எட்ட முடியாத கனவாக இருந்த விமானப் பயணத்தை சாத்தியமாக்கினார். 100% தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று அசத்தியுள்ளார்.
மாணவர்களின் பரவசம்
விமானத்தில் பயணித்த மாணவர்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், "ஒரு காலகட்டத்தில் தங்களுக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் விமானத்தை கீழிருந்து தான் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று அதே விமானத்தில் நேரடியாகப் பயணித்தது வாழ்நாளில் மறக்க முடியாத, மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியளித்த அனுபவமாக அமைந்தது" எனப் பரவசத்துடன் கூறினர். ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் செய்த இந்த அசத்தலான செயல் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















