ஜெயலலிதாவுக்கு பாராட்டு.. இனி பொறுக்க மாட்டோம்.. இதை செய்யுங்க முதல்வரே - அன்புமணி பரபரப்பு
பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகாவிட்டால் அடுத்தக்கட்டமாக சமூக நீதிக்கூட்டமைப்புக் கட்சிகளோடு சேர்ந்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss speech: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டுமென தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூகநீதிக் கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அன்புமணி ராமதாஸ் மேடைப்பேச்சு
அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “சமூகநீதி நாளான இன்று நாங்கள் நடத்தும் அடையாள ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தூங்குவது போல் நடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை எழுப்புவதுதான். இதன் பிறகும் முதல்வர் விழிக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
தமிழ்நாடு அரசிடம் நாங்கள் கேட்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்ல, சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
ஜெயலலிதாவிற்கு பாராட்டு
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வைத்து தமிழகத்திற்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் சேர்த்து பாதுகாத்தவர் ஜெயலலிதா, யாராலும் செய்ய முடியாததை செய்தவர் ஜெயலலிதா. இன்று யார் நினைத்தாலும் அதுபோன்ற ஒன்றை செய்ய முடியாது. ஜெயலலிதா அவ்வாறு செய்யவில்லை என்றால் இப்போது தமிழ்நாட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடுதான் இருந்திருக்கும்.

தற்போது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரும்.1931 கணக்கெடுப்பின் பிறகு இதுவரை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2011இல் உச்ச நீதிமன்றம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட பிறகும் இதுவரை தமிழ்நாடு அரசு அதை செய்யவில்லை.
இருளில் நடப்பது போன்ற செயல்
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தபோது நாங்கள் வைத்த முதல் நிபந்தனையே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான். கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது இருளில் நடப்பது போன்ற செயல்.
2021-இல் எடப்பாடி பழனிசாமி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குலசேகரன் ஆணையத்தை நிறுவினார், திமுக வந்தவுடன் அதை கலைத்துவிட்டனர்.
தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அறிவிப்பு வெளியிட்ட ஒரு மாதத்தில் அதற்கான பணிகளையும் தொடங்க வேண்டும்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வராவிட்டால் அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார், இனியும் பொறுமையாக இருக்க மாட்டோம் இது எங்கள் உரிமை பிரச்சனை.
சாதி சண்டையை தூண்டிவிடும் திமுக
சாதிச் சண்டையை தூண்டிவிடுவது திமுகதான், சிறிய பிரச்சனையை பெரிதாக்கி சாதிச்சண்டையை உருவாக்குகின்றனர்.
தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத்து சாதிக்கும் கிடைக்க வேண்டும். சமூக நீதி என்பது எங்கள் ரத்தத்தில் ஊறியது, திமுக போல நாங்கள் வெறுமனவே சமூகநீதி என பேசுபவர்கள் அல்ல. இந்த போராட்டம் கூட்டணி அரசியலுக்கானது அல்ல , ஆனால் பிற்காலத்தில் நாங்கள் எப்படி வருவோம் என தெரியாது” என தெரிவித்தார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















