Chennai AC Train: தொடங்கிய குளுகுளு பயணம்.. சென்னையின் முதல் ஏசி ரயில் எங்கெங்கு நிற்கும்.. கட்டண விவரம் தெரியுமா.?
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது. அந்த ரயில் எங்கெங்கு நின்று செல்லும், கட்டணங்கள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம்.

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மின்சார ரயில் இருந்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளை இணைக்கும் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. அது எங்கெங்கு நின்று செல்லும், கட்டணங்கள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம்.
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ஏசி ரயில் சேவை
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான ரயில் தடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய ரயில் வழித்தடமாக இது இருக்கிறது.
இந்நிலையில், ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஏசி ரயில்களை தயாரித்தது ரயில்வே நிர்வாகம். கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அதிலிருந்த சிறு சிறு கோளாறுகள் சரி செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தற்போது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே தமிழகத்தின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. குளிர்சாதன வசதியுடன் 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர். இந்த ரயிலில் ரயில் நிலையங்களின் விவர அறிவிப்பு, தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமரா, ஓட்டுநரை தொடர்பு கொள்வதற்கான சாதனம் என பல வசதிகள் உள்ளன.
110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயிலில், 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் அமர்ந்தும், நின்றும் 5,700 பேர் பயணிப்பதற்கான இட வசதி உள்ளது.
ஏசி ரயில் புறப்படும் நேரம்
இந்த ஏசி ரயிலானது, தாம்பரம் பணிமனையிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து, காலை 7 மணிக்கு புறப்பட்டு, 7.48 மணிக்கு தாம்பரத்தையும், 8.45 மணிக்கு செங்கல்பட்டையும் சென்றடையும்.
இதேபோல், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.20 மணிக்கு தாம்பரத்தையும், 5.25 மணிக்கு செங்கல்பட்டையும் சென்றடையும். இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதேபோன்று, மறுமார்க்கத்தில், செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் ஏசி ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்கள் முறையே, காலை 9.38 மணிக்கும், மாலை 6.23 மணிக்கும் தாம்பரத்தையும், காலை 10.30 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும் சென்னை கடற்கரையை சென்றடையும்.
எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்.?
இந்த ஏசி மின்சார ரயில், கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய 12 நிறுத்தங்களில் நின்று செல்லும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், ஒரு நிமிடம் நிற்கும் இந்த ரயிலில், தானியங்கி கதவுகள் மூடுவதற்கு முன்பு, பயணிகள் இறங்கி, ஏறிவிட வேண்டும்.
ஏசி ரயிலில் பயணிக்க கட்டணம் எவ்வளவு.?
இந்த ஏசி மின்சார ரயிலில் அதிகபட்சமாக 105 ரூபாயும், குறைந்தபட்சமாக 35 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை 105 ரூபாயும், தாம்பரம்-செங்கல்பட்டிற்கு 85 ரூபாயும், தாம்பரம்-எழும்பூருக்கு 60 ரூபாயும், செங்கல்பட்டு-எழும்பூருக்கு 85 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.





















