30 ஆண்டுக்கு பின் செங்கல்பட்டு மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..ரூ.97 கோடியில் தயாராகும் புதிய பேருந்து நிலையம்..!
Chengalpattu New Bus Stand: புதிய பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வெண்பாக்கத்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிலையம் வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது.
செங்கல்பட்டு பேருந்து நிலையம்
சென்னை அதிக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் புறநகர் மாவட்டங்களும் சென்னைக்கு நிகரான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டமும் வேகமாக வளர்ந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட தலைநகராக இருக்கக்கூடிய செங்கல்பட்டில், தற்பொழுது இருக்கும் பேருந்து நிலையம் போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய பேருந்து நிலையமாக உள்ள செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில், சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், திருப்பதி, கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் - chengalpattu new bus stand
தலைநகரமாக செங்கல்பட்டு உருவெடுத்துள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு கல்லூரிகள் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் படையெடுக்கின்றனர். போக்குவரத்து நெரிசலால், வேலைக்கு செல்பவர்கள் மாணவ - மாணவிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு தலைநகரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் சுமார் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு வெண்பாக்கம் பகுதியில் சுமார் 40,274 சதுர மீட்டரில் பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம், முதல் மற்றும் 2ம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள் உள்ளன ?
- செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
- வெண்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 46 பேருந்துகள், பணிமனையில் 61 பேருந்துகள் நிறுத்தப்படும்.
- 1,120 சதுர மீட்டர் பரப்பளவில் பணிமனையும், 630 சதுர மீட்டர் பரப்பளவில் பணிமனை அலுவலக பகுதியையும் கொண்டிருக்கும்.
- 936 சதுர மீட்டர் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் 67 கார்கள் மற்றும் 782 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
- 30 கடைகள் கட்டப்பட உள்ளன.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இப்ப பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பயன்பாட்டிற்கு வருவது எப்பொழுது ?
பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் ஒரு சில மாதங்களில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பேருந்து நிலைய பணிகள் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இந்த பேருந்து நிலையம் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமையப்பட உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதே போன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகேவும் இந்த பேருந்து நிலையம் அமைந்திருப்பது பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















