CM Stalin: 5 ஆண்டு ஆட்சியில் எவ்வளவு பேருக்கு எந்தெந்த துறைகளில் அரசு வேலை? பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்!
தங்களின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், மொத்தம் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 131 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

''பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கின்ற தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக, கிட்டத்தட்ட 38 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்''- முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 வெற்றியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
எந்தெந்த துறையில் அரசு வேலை?
தொடர்ந்து விழாவில் அவர் பேசும்போது, ’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 45 ஆயிரத்து 126 பேர் இதுவரை வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 24 ஆயிரத்து 927 பேர் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 12 ஆயிரத்து 894 பேர் சேர்ந்திருக்கிறார்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 11 ஆயிரத்து 244 பேர் சேர்ந்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், பணியின்போது இயற்கை எய்தும் அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டத்தின்கீழ் 5 ஆயிரத்து 899 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.
ஐந்தாண்டு காலத்தில்..
அதேபோல பல்வேறு அரசுத் துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54 ஆயிரத்து 864 பேர் சேர்ந்திருக்கிறார்கள். விளையாட்டு இடஒதுக்கீட்டில், 177 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.
இவ்வாறு இந்த ஐந்தாண்டு காலத்தில், மொத்தம் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 131 இளைஞர்களுக்கு பணி நியமனத்தை வழங்கியிருக்கிறோம்.
38 லட்சம் வேலைவாய்ப்புகள்
இதையெல்லாம், அரசுத் துறைகளில் செய்தது என்றால், பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கின்ற தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக, கிட்டத்தட்ட 38 இலட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
























