அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம் உங்களுக்காக!!
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற முழு விவரம் உங்களுக்காக.

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்களே. முழுவிபரமும் உங்களுக்காக தரப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள நபர்கள், TRB-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.trb.tn.gov.in)வாயிலாக ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் பதிவு நேற்று (அக்டோபர் 17, 2025) முதல் தொடங்கி உள்ளது. இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 10, 2025 ஆகும். விண்ணப்பதாரர்கள் தங்களது செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியையும் (e-mail id) மொபைல் எண்ணையும் பதிவு செய்வது கட்டாயமாகும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பதவி, பாடம், வகுப்பு இட ஒதுக்கீடு, பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் ஆன்லைன் விண்ணப்பத்தில் இறுதி செய்யப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் குறிப்பிடப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. விண்ணப்பப் பதிவு செய்யும் போதே, தங்களது கோரிக்கைகளுக்கான ஆதாரங்களை (சான்றிதழ்கள்) பதிவேற்றம் செய்ய வேண்டும். முழுமையற்ற அல்லது குறைபாடுள்ள விண்ணப்பங்கள் எந்தவொரு விசாரணையும் இன்றி நிராகரிக்கப்படும். திருத்தம் செய்ய விரும்பினால், நவம்பர் 11, 2025 முதல் நவம்பர் 13, 2025 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். இருப்பினும், பட்டியல் சாதி (SC), பட்டியல் சாதி (அருந்ததியர் - SCA), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (Differently Abled Persons) ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.300 மட்டுமே. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் கட்டண நுழைவாயில் (Net banking / Credit Card / Debit Card) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கியமாக, இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளான 12/2019 மற்றும் 02/2024-இன்படி விண்ணப்பித்து, ஏற்கனவே கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அனைவரும் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். எனினும், அவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுக்கு வயது வரம்பிலும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்துக் கோரிக்கைகளுக்கும் ஆதாரமாக, பின்வரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் அறிக்கைகளை ஆன்லைன் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும்.
10-ஆம் வகுப்பு / 12-ஆம் வகுப்பு மதிப்பெண் தாள்கள். இளங்கலை (UG), முதுகலை (PG) மற்றும் பிற கல்விச் சான்றிதழ்கள் (M.Phil, B.Ed, M.Ed, Ph.D). NET / SLET / SET சான்றிதழ்கள் (பொருந்தினால்). சமத்துவத் தகுதிக்கான அரசு ஆணை (Equivalence G.O. - பொருந்தினால்).
சாதிச் சான்றிதழ் (Community Certificate). தமிழில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM) - (பொருந்தினால்). தடையின்மைச் சான்றிதழ் (No Objection Certificate - NOC - பணியில் இருந்தால்). விரிவுரையாளர் / உதவிப் பேராசிரியர் கற்பித்தல் அனுபவச் சான்றிதழ் (Teaching Experience). மாற்றுத்திறனாளி (PwD) அடையாள அட்டை.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 200 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் அனுபவம்/நேர்காணலுக்கு 30 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறுங்கள். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்து விட வேண்டாம்.





















