Scholarship: வேலை கிடைக்கலையா? இளைஞர்களே, தமிழக அரசின் உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி? கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் இளைஞர் தலைமுறைக்கு வேலை வழங்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு அரசு சார்பிலேயே சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
யாரெல்லாம் உதவித்தொகை பெற முடியும்?
- எஸ்.எஸ்.எல்.சி தோல்வி/ எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி/ எச்.எஸ்.சி/ பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-32. கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்.
- விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதிவுடையவர் ஆவர்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32. கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை- 32. கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எவ்வளவு உதவித்தொகை?
10ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாய் என் வருடத்திற்கு 2400 ரூபாய் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் என 3600 ரூபாயும், டிப்ளமோ மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாய் என வருடத்திற்கு 4800 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே போல கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாய் என 7200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண். உதவித்தொகை எண் (MR. No.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
























