Penile Reconstruction: இதுதான்யா சாதனை.. 4 வயதில் கொடூரம், முழங்கையால் மீண்டும் கிடைத்த ஆணுறுப்பு - இந்திய மருத்துவர்கள் அபாரம்
Penile Reconstruction: சிறுவயதில் முழுமையாக ஆணுறுப்பை இழந்த சோமாலியாவைச் சேர்ந்த இளைஞருக்கு , இந்திய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

Penile Reconstruction: ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், 10 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் சோமாலிய இளைஞருக்கு மீண்டும் வாழ்வளித்துள்ளனர்.
ஆணுறுப்பு மறுகட்டமைப்பு:
ஐதராபாத்தில் உள்ள மெடிகவர் எனும் தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, சோமாலியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்கு, இயற்கையாக செயல்படக்கூடியதை போன்ற ஆணுறுப்பை மறுகட்டமைப்பு செய்து கொடுத்துள்ளனர். அந்த நபரின் நான்கு வயதில், இஸ்லாமிய முறையில் சுன்னத் எனப்படும், ஆணுறுப்பின் முன் தோல் பகுதியை நீக்கும் முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தொற்று காரணமாக பிறப்புறுப்பை இழந்தார். இந்நிலையில், பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான மைக்ரோவாஸ்குலர் சிகிச்சை முறை மூலம், அவரது சிறுநீர் கழிக்கும் திறனை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல், பாலியல் செயல்பாட்டை மீண்டும் பெறவும் வழிவகை செய்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரச்னை என்ன?
பாதிக்கப்பட்ட நபர் ஆணுறுப்பை இழந்ததால் பல ஆண்டுகளாகவே, கடுமையான உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரங்களுக்கு ஆளாகியுள்ளார். பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தீர்வுகளை தேடும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் அவர் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் தான், ஒரு வருடத்திற்கு முன்பு அவர் ஐதராபாத்தில்ல் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். பரிசோதனையில், அவரது குழந்தை பருவத்தில் செய்யப்பட்ட சுன்னத்தால் ஏற்பட்ட தொற்று விரிவான சேதத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் அவரது ஆண்குறி இழப்பு மற்றும் கற்கள் உருவாகி சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தொடர் அறுவை சிகிச்சை திட்டம்:
மெடிகவர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மருத்துவர் மற்றும் ஆண்குறி மருத்துவர் டாக்டர் ஏ.வி.ரவி குமார் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் அழகுசாதன அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தாசரி மது வினய் குமார் தலைமையிலான பல்துறை குழு, பாதிக்கப்பட்ட நபருக்கான துல்லியமான அறுவை சிகிச்சை திட்டத்தை வகுத்தது. சிகிச்சையின் முதல் கட்டமாக, கற்களை அகற்றி தொற்றுக்கு சிகிச்சையளித்து சிறுநீர் அடைப்பு அகற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து சிக்கலான ஆண்குறி மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மருத்துவ குழு மேற்கொண்டது. அதன்படி, ஆண்குறி தோலை ஒத்திருப்பதால் நோயாளியின் முன்கையில் இருந்து தோல், தமனிகள், நரம்புகள் மற்றும் திசுக்கள் ஆணுறுப்பு மறுசீரமைப்புக்காக எடுக்கப்பட்டன.
ஆணுறுப்புக்கான திசுக்கள் போன்றவற்றை வழங்க தொடையும் ஒரு விருப்பமாக இருந்தாலும், திசுக்களின் பருமனான தன்மை காரணமாக இந்த விஷயத்தில் அது பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. இதனால் மறுசீரமைப்பு கடினமாகலாம் என கூறி, முழங்கையில் இருந்து தேவையான திசுக்களை எடுத்துள்ளனர்.
10 மணி நேர அறுவை சிகிச்சை:
10 மணி நேர மைக்ரோவாஸ்குலர் அறுவை சிகிச்சையின் போது, முழங்கையில் இருந்து தோல், நரம்புகள், ரத்த நாளங்கள் மற்றும் திசுக்கள் அறுவடை செய்யப்பட்டு, புதிய ஆண்குறியை மீண்டும் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சரியான ரத்த ஓட்டத்தை உறுதி செய்வதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தமனிகள் மற்றும் நரம்புகளை கவனமாக இணைத்தனர். அதே நேரத்தில் விதைப்பைப் பகுதியிலிருந்து ஒரு தனி சிறுநீர் பாதை உருவாக்கப்பட்டது. சிறுநீர் கழிப்பதை எளிதாக்க, ஒரு செயல்பாட்டு சிறுநீர்க்குழாய் அமைக்கப்பட்டது. மேலும், உடலுறவின்போது விறைப்புத்தன்மையை அனுமதிக்க சிலிகான் தண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த இரண்டு-நிலை செயல்முறை படிப்படியாக உணர்வை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் தற்போது இயல்பாக சிறுநீர் கழிக்கிறார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஆண்குறி தொடர்பான சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் நோயாளி இயல்பான பாலியல் செயல்பாட்டை அடைய முடியும் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக மூன்று முதல் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நோயாளி, இப்போது வீடு திரும்ப தயாராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )




















