“த்ரிஷா மாதிரி மனைவி.. விஜயகாந்த் இடம்.. வெற்றிமாறன் பட ஹீரோ” - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சபதம்!
விஜயகாந்தைப் போல சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பேன். நாளைக்கு நானே நடிகர் சங்க தலைவராக கூட மாறலாம் என வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தைப் போல சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பேன் என சமூக வலைத்தளப் பிரபலம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சபதம் எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளம் மூலம் பிரபலாகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சையமானவர் திவாகர். தன்னை வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் என்றும், நடிப்பு அரக்கன் எனவும் அடைமொழியிட்டு அழைத்துக் கொள்பவர். இவர் தொடர்ச்சியாக சினிமாவிலும் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், “ மதுரையில் இருந்து சென்னை வந்து சினிமாவுக்கு நுழைந்து மக்கள் மனதில் ஆழமாக பதிந்த விஜயகாந்துக்கு பிறகு அந்த ஊரில் இருந்து யாரும் பெரிதாக வரவில்லை. மதுரை மீனாட்சியம்மன் அருளால் விஜயகாந்தின் காலியான இடத்தைப் பிடிக்க இந்த வாட்டர்மெலன் ஸ்டார் வந்துள்ளேன். இயல், இசை, நாடகத்தை வளர்த்த இடம் தான் மதுரை. அனைவருக்கும் சமபந்தி உணவளிக்க வேண்டும் என தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றியவர் அவர். அந்த பணியை பிரேமலதா தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வருகிறார்.
அப்படியாக விஜயகாந்தைப் போல சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பேன். நாளைக்கு நானே நடிகர் சங்க தலைவராக கூட மாறலாம். ஆனால் என்னுடைய கொள்கை, கோட்பாட்டில் இருந்து மாற மாட்டேன். அதாவது எனக்கு அரசியல் வேண்டாம், பொதுமக்களிடம் விளம்பரத்தை திணிக்கக்கூடாது. நான் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக நடித்தால் நிச்சயம் நான் விஜயகாந்த் செய்த பணிகளை மேற்கொள்வேன். நான் அவரை போல தோற்றத்தைக் கொண்டுள்ளேன் என பலர் என்னிடம் சொன்னார்கள்.
மதுரையில் இருந்து வந்தாலும் வடசென்னை போன்ற படங்களில் நான் நடிப்பேன். அது கடவுளுக்கு எனக்கு கொடுத்த வாய்ப்பு என சொல்லலாம். ஏன் நான் அவரின் படத்தில் ஹீரோவாக கூட நடிக்கலாம். வடசென்னை 2 படத்தில் என்னுடைய படத்தில் நான் முக்கிய பங்கு வகிப்பேன் என நினைக்கேன். அதற்கான முயற்சியை மேற்கொள்வேன். மதுரை மாதிரி வடசென்னை கலாச்சாரம் சார்ந்த படங்கள் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துள்ளது. நான் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இன்னும் 2 படத்தில் ஹீரோவின் நண்பனாக நடிக்கிறேன்.
பெரிய பெரிய புரொடக்ஷன்ஸ் சார்பில் பேசியிருக்கிறார்கள். ஏப்ரல், மே மாதத்தில் ஷூட்டிங் இருக்கும். இன்னும் ஒரு வருடத்தில் என்னுடைய படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். 2கே கிட்ஸ் எனப்படும் இளைஞர்களை நான் கவர் பண்ணி விட்டேன். ஒரு இயக்குநர், இளைஞர்கள் என்னை ஃபாலோ பண்ணுவதாகவும், படம் பண்ணினால் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கலாம் என சொன்னார்.
எனக்கு த்ரிஷா மாதிரி ஒரு நல்ல மனைவி அமைந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதேபோல் தமன்னாவையும் பிடிக்கும். என்னுடைய வயது பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது" என கூறியுள்ளார்.























