நாகினிக்கே இந்த நிலையா? "இடுப்பில் கை வைத்தனர்...” மௌனி ராய் சந்தித்த கசப்பான அனுபவம்
ஹரியானாவின் கர்னல் பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வின்போது, முதியவர்கள் சிலர் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதாக மௌனி ராய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை மௌனி ராய் அண்மையில் ஹரியானாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் தான் சந்தித்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஹரியானாவின் கர்னல் பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வின்போது, முதியவர்கள் சிலர் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதாக மௌனி ராய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வின் தொடக்கத்திலேயே சில வயதான நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படம் எடுக்கும் சாக்கில் நடிகையின் இடுப்பில் கை வைத்ததாகவும், "சார், உங்கள் கையை எடுங்கள்" என்று அவர் மரியாதையுடன் கேட்டபோது அவர்கள் அதனை ரசிக்கவில்லை என்றும் மௌனி குறிப்பிட்டுள்ளார். மேடைக்குச் சென்ற பிறகு நிலைமை இன்னும் மோசமானது. மேடைக்கு முன்னால் நின்றிருந்த இரு முதியவர்கள் நடிகையைப் பார்த்து ஆபாசமான சைகைகளை செய்ததோடு, தகாத வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளனர். இதனைத் தவிர்க்குமாறு மௌனி சைகை காட்டியும் அவர்கள் நிற்காமல், அவர் மீது ரோஜாக்களை வீசி எறிந்து தொந்தரவு செய்துள்ளனர்.

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட மௌனி ஒருகட்டத்தில் மேடையை விட்டு வெளியேறத் தொடங்கினார், இருப்பினும் ஒரு கலைஞராக தனது கடமையை உணர்ந்து மீண்டும் வந்து நிகழ்ச்சியை நிறைவு செய்துள்ளார். இவ்வளவு அநாகரீகமான செயல்கள் நடந்தும், அந்த முதியவர்களை அங்கிருந்து அகற்றவோ அல்லது கண்டிக்கவோ விழா ஏற்பாட்டாளர்களோ அல்லது அங்குள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களோ முன்வராதது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக மௌனி கூறியுள்ளார்.

மேடை உயரமாக இருந்த நிலையில், அந்த நபர்கள் கீழிருந்து தவறான கோணத்தில் (Low Angle) வீடியோ எடுத்ததாகவும் மௌனி புகார் தெரிவித்துள்ளார். இதைத் தட்டிக்கேட்டவர்களை அவர்கள் தரக்குறைவாகத் திட்டியுள்ளனர். தனக்கே இந்த நிலை என்றால், திரைத்துறைக்கு வரும் புதிய பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு கேள்விக்குறியாக இருக்கும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். திருமணங்கள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் வாழ்த்துக் கூற வரும் கலைஞர்களை விருந்தினர்களாக நடத்தாமல், இப்படி இழிவுபடுத்துவது வெட்கக்கேடானது என்று மௌனி ராய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் அவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
























