Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசிய சத்யராஜை தனது படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் அஜித்குமார். முதலமைச்சர் விஜய் நடிகராக தனது பயணத்தை தொடங்கியபோது அவரது சமகாலத்தில் நடிகராக பயணத்தை தொடங்கியவர். ரஜினி - கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை விஜய் - அஜித் இருவரும் ஆட்சி செய்கின்றனர் என்றே கூறலாம்.
டேர்டெவில்:
அஜித்குமார் தற்போது கார் ரேஸிங்கில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், அடுத்த படத்தில் நடிக்கிறார். குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்திற்கு டேர் டெவில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சத்யராஜுக்கு நோ:
அஜித் கேட்கும் சம்பளம் மிகப்பெரிய சிக்கலாக தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சூழலில், அவரே தன்னுடைய அடுத்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை அணுக படக்குழு முடிவு செய்ததாகவும், ஆனால் அதற்கு அஜித் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
நடிகர் அஜித்தும், விஜய்யும் திரையுலகில் சம பலம் வாய்ந்த போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டது இல்லை. அதுவும் விஜய்யின் அரசியல் பயணத்தின்போது கரூர் சம்பவம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளை அஜித் கையாண்ட விதம் தவெக-வினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் அவர் மீதான மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது.
திரையுலகில் பலரும் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்த நிலையில், அஜித் விஜய் குறித்து எந்த வித தனிப்பட்ட கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், நடிகர் சத்யராஜ் திமுக-விற்காக தீவிர பரப்புரை மேற்கொண்டதுடன் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார். விஜய்யை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்த
சத்யராஜ் தற்போது தான் தயாரிக்கும் படத்தில் நடிப்பதை அஜித் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் வளர்ந்து வந்த காலகட்டத்தில் சத்யராஜுடன் இணைந்து பகைவன் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின்பு, இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவே இல்லை. அஜித் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
சூடுபிடிக்கும் படப்பிடிப்பு:
படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் பணிகள் தொடங்கும் முன்பே இந்த படம் 180 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகியுள்ளது. அஜித்தே தயாரிப்பதால் இயக்குனர், இசையமைப்பாளர், முக்கிய கதாபாத்திரங்கள் ஆகியோரின் ஊதியங்களே பெரியளவில் இருக்கும். திரைப்பட தயாரிப்பு செலவு தவிர படம் மிகப்பெரிய அளவில் லாபத்தையே அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















