லிங்கம் தொடர் இயக்குநர் , எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்
கதிர் நடித்து ஜூன் 26 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் லிங்கம் வெப் சீரிஸ் இயக்குநர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்

90 களில் கன்னியாகுமரியில் பிரபல கேங்க்ஸ்டராக இருந்த முத்துலிங்கத்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் லிங்கம். கதிர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் இந்த தொடரை இயக்கியுள்ளார். லிங்கம் தொடரை இயக்கிய அனுபவம் குறித்த கேள்விகளுக்கு லக்ஷ்மி சரவணகுமார் பதிலளித்துள்ளார்
தமிழ் இலக்கியத்தில் நாவல் மற்றும் சிறுகதை பரப்பில்உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். தற்போது லிங்கம் தொடரின் மூலம்இயக்குநராக அறிமுகமாக இருக்கிறீர்கள். எழுத்தும் , சினிமாவும் வெவ்வேறு வடிவ ஆளுமையை கோருபவை. லிங்கம் தொடரை இயக்கும்போது தனிப்பட்ட முறையில் இயக்குநராக எந்த மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்? இயக்கம் சார்ந்த உங்களது புரிதலில் மாற்றம் ஏற்பட்டதா?
இந்த தொடரை இயக்கும்போது எனக்கிருந்த முக்கியமான சவால், எழுத்தாளனின் இயல்புகளை முடிந்தளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதுதான். ஒரு எழுத்தாளனுக்கு கதாபாத்திரங்களின் மனநிலைகளை விரிவாக விளக்க சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இயக்குநராக அவற்றை காட்சிகளாக மாற்ற வேண்டும். "ஒரு கதாபாத்திரம் என்ன நினைக்கிறான்?" எனச் சொல்வதை விட, "அவன் அதை எப்படிச் செய்கிறான் என்பதை காட்சிப்படுத்துவதுதான் முக்கியமானது.
ஒரு படைப்பை நான் எழுதும்போது அங்கு எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். ஆனால் சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒளிப்பதிவாளர், நடிகர்கள், கலை இயக்குநர், எடிட்டர் என பலரின் படைப்பாற்றலும் அதில் கலக்கிறது. அவர்களது கருத்திற்கும் செவி சாய்க்க வேண்டியது எனது கடமை. எந்தக் குரலுக்கும் கட்டுப்படாத ஆளுமை எழுத்தாளனுடையது என்றால் எல்லோருடைய கருத்தையும் மதிக்க வேண்டியது ஒரு இயக்குனரின் அடிப்படைத் தகுதி. ஆரம்பத்தில் இது சவாலாக இருந்தாலும், பின்னர் அதுவே சினிமாவின் மிகப்பெரிய பலம் என்பதை உணர்ந்தேன். சில காட்சிகள் நான் எழுதியதைவிட சிறப்பாக உருவானதற்கு காரணம் அந்தக் கூட்டுப் படைப்பாக்கம்தான்.
ஒரு இயக்குனரின் வேலை கதையை காட்சியாக்குவது மட்டுமல்ல, பல துறைகளை ஒரே உணர்வில் இணைத்து ஒரு உலகத்தை உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நல்ல இயக்குநரின் ஆளுமை சிறந்த கதையை உருவாக்குவது மட்டுமல்ல, ஒரு பெருங்குழுவின் ஆற்றலை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தத் தொடரை இயக்கிய அனுபவம் எழுத்தாளராகவும் என்னை மறுபரிசீலனை செய்ய வைத்தது. இப்போது நான் ஒரு காட்சியை எழுதும்போது காட்சியின் ஒளி, இடம், அமைதி, நடிகரின் முகபாவனை போன்றவற்றை அதிகமாக யோசிக்கிறேன். அந்த வகையில் இயக்கம் பற்றிய இந்தப் பயணம், என்னுடைய கதை சொல்லும் மொழியையே மாற்றியிருக்கிறது என்று சொல்லலாம்.
இலக்கியத்தில் சிக்கலான உணர்வுகளையும் வார்த்தைகளில் கொண்டு வந்துவிடலாம். குறிப்பாக உங்களது படைப்புகளில் மனிதர்களின் காம குரோதம் தொடர்பான உணர்வுகளை மிக வெளிப்படையாக எழுதக்கூடியவர் . சினிமாவில் காட்சி ரீதியாக இதை காட்ட வேண்டும் இதை காட்டக் கூடாது என்கிற கட்டுப்பாடு உண்டு. ஓடிடி தளம் உங்களை ஒரு படைப்பாளியாக முழுமையாக வெளிப்பட உதவியதா ?
என்னுடைய படைப்புகளில் வெளிப்படும் காமம் வெறும் உடல் சார்ந்த விஷயமல்ல, அது அதிகாரம், தனிமை, ஏக்கம், நிராகரிப்பு, குற்றவுணர்வு போன்ற பல உளவியல் அடுக்குகளுடன் இணைந்த ஒன்று. அதேபோல குரோதத்தையும் நான் வெறும் கோபமாக வெளிப்படுத்துவதில்லை; சமூக அமைப்புகள், அவமானங்கள், ஒடுக்குமுறைகள், விரக்திகள் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே எழுதியிருக்கிறேன். இலக்கியத்தில் இந்த சிக்கல்களை விரிவாக எழுத முடியும். ஆனால் திரையில் அவற்றை காட்சிப்படுத்தும்போது கூடுதலான பொறுப்புணர்வு தேவைப்படுகிறது.
ஓடிடி தளங்கள் நிச்சயமாக ஒரு படைப்பாளிக்கு சில சுந்தந்திரங்களை வழங்கியிருக்கின்றன. மனிதர்களை முழுமையானவர்களாகவும், அவர்களுடைய முரண்பாடுகளோடும், குறைகளோடும் சித்தரிக்கக்கூடிய இடத்தை உருவாக்கியிருக்கின்றன. பாரம்பரிய தணிக்கை மற்றும் வடிவமைப்பு கட்டுப்பாடுகளைக் கடந்து, சிக்கலான கதைகளையும் கதாபாத்திரங்களையும் சொல்லக்கூடிய வாய்ப்பு உண்டு.
ஆனால் அந்த சுதந்திரத்தை, எல்லாவற்றையும் காட்டுவதற்கான உரிமையாக நான் பார்க்கவில்லை. என் முன்னால் இருக்கும் கேள்வி, "இதை காட்ட முடியுமா?" என்பது அல்ல; "இதை ஏன் காட்ட வேண்டும்?" என்பதுதான். ஒரு காட்சியில் வெளிப்படும் நிர்வாணம் அல்லது வன்முறை கதையின் ஆன்மாவுக்கு அவசியமானதா, கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறதா, அல்லது வெறும் அதிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதுதான் முக்கியம்.
எனவே, ஓடிடி தளங்களில் இருக்கும் சுதந்திரத்தை எல்லைகளை உடைப்பதற்காக அல்ல; மனிதர்களின் சிக்கலான உண்மைகளை இன்னும் நேர்மையாகவும் நுட்பமாகவும் சொல்லுவதற்கான வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். எந்த கலை வடிவமாக இருந்தாலும், வெளிப்படைத்தன்மையை விட உண்மைத்தன்மைதான் எனக்கு முக்கியம். ஒரு காட்சியை எவ்வளவு தைரியமாகக் காட்டுகிறோம் என்பதைக் காட்டிலும், அதை எவ்வளவு நேர்மையாகச் சொல்கிறோம் என்பதுதான் ஒரு படைப்பின் மதிப்பைத் தீர்மானிக்கிறது.
இலக்கியவாதிகள் எளிதில் சமரசம் செய்துகொள்பவர்கள் கிடையாது. இந்த தொடருக்காக நீங்கள் செய்த சமரசங்கள் என்ன ?
"எந்தப் படைப்பாளியும் சமரசம் செய்வதை விரும்புவதில்லை. ஆனால் ஒரு நாவலை எழுதுவதற்கும் திரைப்படத்தை இயக்குவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம் தனிமனிதனின் கலை. சினிமா கூட்டு உழைப்பில் உருவாகக் கூடிய கலை. இங்கே எனது பார்வையை மட்டுமல்ல, தயாரிப்பு நிதி, காலக்கெடு, தொழில்நுட்ப சாத்தியங்கள், பார்வையாளர்களின் அனுபவம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சில சமரசங்களைச் செய்திருக்கிறேன். ஆனால் அவை கதையின் ஆன்மாவை மாற்றும் சமரசங்கள் அல்ல. எழுத்தாளராக நான் ஒரு சம்பவத்தின் உளவியல் அடுக்குகளை நீண்ட நேரம் ஆராய விரும்புவேன். ஆனால் திரையில் இன்னும் சுருக்கமாகவும், காட்சிப்பூர்வமாகவும் சொல்ல வேண்டியிருக்கும். சில கதாபாத்திரங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம், சில காட்சிகள் சுருக்கப்பட்டிருக்கலாம், சில விஷயங்கள் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் கதையின் மைய உணர்வோ, அதன் மனித இயல்பு குறித்த பார்வையோ எந்த இடத்திலும் சமரசம் செய்யப்படவில்லை என நம்புகிறேன்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















