DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
DMK files complaint against Vaiko : குதிரை பேரம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மதிமுக பொதுச்செயலாளர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஆளுநருக்கு திமுக அளித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்- பல்டி அடித்த கட்சிகள்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக தவெக கூட்டணியில் இணைந்து ஆதரவு தெரிவித்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக அணியில் இணைந்தது. கடைசியாக திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதிமுகவும் தவெக அணியில் இணைந்தது. தங்கள் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெக ஆதரவுடன் தனி சின்னத்தில் களத்தில் இறக்கலாம் என வைகோ திட்டமிட்டார்.
குதிரை பேரம்- சர்ச்சையில் சிக்கிய வைகோ
இதற்காக முதலமைச்சர் விஜய்யிடம் தாம் பேசியதாகவும், அவரும் மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வைத்தால் அவர்களது வெற்றிக்கு உழைப்பதாக் தெரிவித்ததாகவும், பிரச்சாரம் செய்யவும் தயார் என கூறியதாக வைகோ தெரிவித்திருந்தார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் இதற்கு வைகோவும் துணை புரிவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக ஆளுநரை திமுக நிர்வாகிகள் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அந்த மனுவில், 01.07.2026 தேதியிட்ட எனது புகாரின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் வைகோ ஆகியோர் இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றவியல் சதித்திட்டம் குறித்து, முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்யவும், முழுமையான குற்றவியல் விசாரணையைத் தொடங்கவும் உத்தரவிடுமாறு தங்களின் உடனடி அரசியலமைப்பு ரீதியான தலையீட்டை கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரிடம் திமுக புகார்
அதனைத் தொடர்ந்து, 04.07.2026 அன்று, சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட போது காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தமது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணையுமாறு கட்டாயப்படுத்த முயன்றதாகக் குறிப்பாகக் கூறப்பட்டது. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டினிடம் பதவி மற்றும் பிற சலுகைகளை முன்வைத்து, அவரை கட்சி மாறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் "குதிரைப் பேரம்" (Horse Trading) தொடர்பான அணுகுமுறையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எப்ஐஆர் பதிவு செய்யுங்கள்
எனவே வைகோ எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது தொடர்பாக குதிரை பேரம் தொடர்பாக பொதுவெளி ஒப்புதல், எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் பொதுவெளி ஒப்புதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பரிசீலித்தால், அவை விசாரணை செய்யத்தக்க குற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான போதுமான தகவல்களை கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, சட்டத்தின்படி குற்றவியல் விசாரணையைத் தொடங்குவது தவிர்க்க முடியாத சட்டப்பூர்வக் கடமையாகும் என திமுக சார்பாக ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















