Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்ற ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. வீடு போல் கலை அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி 28 வயது இளைஞர் கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அதிபிரம்மாண்டமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினி , ரம்யா கிருஷ்ணன் , ஷிவராஜ்குமார் , மோகன்லால் , பாலையா , விஜய் சேதுபதி , வித்யா பாலன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து பான் இந்திய திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் அறிவித்தார்கள். ஒரு சில பேட்ச் வர்க் காட்சிகளை தற்போது படக்குழுவினர் சென்னை பனையூரில் எடுத்து வந்தார்கள் . அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கிவந்த வேட்டுவம் படத்தில் விபத்து ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். அதேபோல் கார்த்தி நடித்து வந்த சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் எழுமலை 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இந்த துர்சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என அண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















