Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
ஆகாயம் படத்தில் குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போய்விடும் என்ற வசனம் உள்ளது. என்னைப் போல சினிமா மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் குடிக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள் என இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

குடியால் வாழ்க்கையில் 25 ஆண்டுகளைத் தொலைத்தவர்களில் நானும் ஒருவன் என இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
முரளி நடித்த தினந்தோறும் படம் மூலம் இயக்குநரானவர் நாகராஜ்.இந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் அதன்பிறகு அவர் பல ஆண்டுகள் படம் இயக்கவில்லை. கௌதம் மேனனின் மின்னலே, காக்க காக்க ஆகிய படங்களுக்கு நாகராஜ் வசனம் எழுதியிருந்தார். கடைசியாக 2013ம் ஆண்டு மத்தாப்பூ என்ற படத்தை இயக்கியவர் இப்போது 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ஆகாயம் என்ற படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா மிராணி உள்ளிட்டோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தை டெல்டா டாக்கீச் சார்பில் ஜெயச்சந்திரன் தயாரித்துள்ளார். ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நாகராஜ், மறுபடியும் என்னை இந்த இடத்தில் நிற்க வைத்த இறைவனுக்கு நன்றி. 3 மணி நேரத்தில் நான் சொன்ன கதையைக் கேட்டு படம் பண்ண ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாளை நிறைய படம் பண்ணலாம், பணம் சம்பாதிக்கலாம், மிகப்பெரிய உயரத்துக்கும் போகலாம். ஆனால் நான் இப்படித்தான் சினிமா எடுப்பேன் என்ற என்னிடம் இருந்த திமிர்த்தனத்தை ரசித்து படம் எடுக்க ஒப்புக்கொண்டார்.
என்னைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகாயம் படத்தில் குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போய்விடும் என்ற வசனம் உள்ளது. என்னைப் போல சினிமா மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் குடிக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அந்த பழக்கம் போய் விட்டது. குடியை வைத்து சிலாகித்து பேசினால் கடுப்பாக இருக்கும். குடிப்பது கொண்டாட வேண்டிய விஷயம் இல்லை. என்னை மாதிரி லட்சக்கணக்கானோர் வாழ்க்கையில் 25,30 ஆண்டுகளை அழித்து விட்டது. குடித்தால் பிரச்னை வரும், குடும்பம் உடையும் அவ்வளவு தான்.
என்னால் அந்த பழக்கத்தில் இருந்து மீள முடியும் என நினைத்தால் மற்றவர்களாலும் முடியும். இங்கு பணத்தை நோக்கி நகர்கிறார்கள் என சொன்னாலும் அன்பாலும் இணைகிறார்கள். அதை அடிப்படையாக கொண்டு தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. நான் இன்றைக்கு இங்கு நிற்க யாரோ என் மீது வைத்த நம்பிக்கை தான்.
அன்பால் தான் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அதற்கு அன்பு தான் காரணம். படம் பார்த்தால் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என் போன் நம்பரை மனப்பாடமாக தெரியாது. ஆனால் நான் எழுதிய 12 கதைகளில் எந்த காட்சி என்பது மனப்பாடமாக இருக்கும். எந்த துறையிலும் ஒழுக்கமில்லாதவர்கள் வாழவே முடியாது. தோற்றால் தோற்பதை ஒப்புக்கொள்ள முடியும். அப்போது தான் அடுத்த வெற்றியை நோக்கி நகர முடியும் என பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















