உங்க மண்ணுல சாதி பிரச்சனையே இல்லையா...மலையாள இயக்குநர்களிடம் கேள்வி எழுப்பிய பா ரஞ்சித்
மலையாள இயக்குநர்கள் ஏன் சாதியை பற்றிய உரையாடலை தங்களது படங்களில் நிகழ்த்துவதில்லை என இயக்குநர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனநல ஆலோசகரிடம் சென்ற பா ரஞ்சித்
கேரள இலக்கிய விழாவில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் சினிமா மற்றும் அரசியல் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். நான் என்னுடைய 8 ஆவது படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். சில படங்களை தயாரித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு பொது இடத்தில் நிறைய மக்களை சந்திக்கும் போது எனக்கு ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. என் வயிற்றில் அடிக்கடி பிரச்சனை இருந்துகொண்டே இருந்தது. நான் அது உடல் ரீதியான பிரச்சனை என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர் தான் அது உளவியல் ரீதியான பிரச்சனையாக இருக்கலாம் என்று சொன்னார். அதனால் ஒரு மனநல ஆலோசகரிடம் சென்றேன். அவர் எனக்கு சின்ன வயதில் ஏதாவது அதிர்ச்சியளிக்கும் விதமாக நடந்திருக்கிறதா என்று கேட்டார். அப்போது தான் சின்ன வயதில் இருந்தே இந்த சமூகம் எனக்கு தொடர்ச்சியான ஒரு பதற்றம் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. என்னுடைய ஊரில் பொதுவான இடங்களில் நான் செல்லும் போதிருந்து எனக்குள் எந்த பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. இன்று ஒவ்வொரு முறை என்னுடைய படத்தை எடுத்து முடித்து தணிக்கைக்கு செல்லும் போதும் வரை எனக்கு அந்த பதற்றம் இருக்கிறது. சின்ன வயதில் இருந்து இன்று 43 ஆவது வயது வரை எனக்கு இந்த பதற்றத்தை நான் சுமந்து தான் வருகிறேன். " என்று பா ரஞ்சித் பேசினார்
ஜனநாயகன் சென்சார் பிரச்சை குறித்து
"சென்சார் போர்ட் பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளாக தான் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த பிரச்சனை எப்போதுமே இருந்துதான் வருகிறது. என்னுடைய மெட்ராஸ் படத்தைப் பார்த்து அந்த படத்திற்கு A பிளஸ் சான்றிதழ் வழங்குவதாக கூறினார்கள். அந்த படம் ரவுடிகளைப் பற்றிய படம் என்று கூறினார்கள். சென்சார் போர்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இருக்க வேண்டும் என்று நான் வாதாடியிருக்கிறேன். ஏனால் அவர்களுக்கு தலித் கலாச்சாரம் பற்றி எந்த புரிதலும் இருப்பதில்லை. இப்போது இந்த பிரச்சனை அனைவருக்கும் பொதுவானதாக மாறியிருக்கிறது. பெண்ணியம் பற்றியோ வேறு எந்த சமூக கருத்தையோ பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் . "
மலையாள இயக்குநர்கள் ஏன் சாதி பிரச்சனையை பேசுவதில்லை
"மலையாள திரையுலகில் பல்வேறு புதுவிதமான படங்களை தயாரிக்கிறார்கள். ஆனால் ஏன் மலையாள இயக்குநர்கள் இங்கு இருக்கக் கூடிய சாதிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. இந்த நிலத்தில் சாதிய பிரச்சனையே இல்லையா. இந்த பிரச்சனைகளை பேசுவதற்கு இயக்குநர்கள் தயங்குகிறார்களோ என்று எனக்கொரு ஒரு எண்ணம் இருக்கிறது. இந்த மாதிரியான பிரச்சனைகளை பேசுவதற்கு இதுதான் சரியான நேரம். அதனால் இனிவரக் கூடிய புதுமுக இயக்குநர்கள் சாதிய பிரச்சனைகளை பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். " என்று பா ரஞ்சித் பேசினார்























