தேவர் மகன் 2 படத்தை இயக்க பேச்சுவார்த்தை.. பிரம்மாண்ட தயாரிப்பு.. இயக்குநர் யார் தெரியுமா?
கமல்ஹாசனை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க இருப்பதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் முத்தையா. இவர், கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், முத்தையா மீது சாதிய படங்களை இயக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணனுடன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் தனது சினிமா அனுபவம் குறித்து முத்தையா மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமாவிற்கு வந்தது எப்படி?
எங்க அண்ணன் ஆர்மியில் இருந்த போது அவரை வழி அனுப்புவதற்காக மதுரைக்கு சென்றேன். அப்போ ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதை பார்க்கும் போது எங்க அப்பாகிட்ட நானும் இதே மாதிரி படம் எடுப்பேன் நீங்களும் என்கூட இருப்பீங்க என்றதும் அவர் சிரித்துவிட்டார். டேய் டீ கடையில் இருக்க வேலையை பாருடா என்றார். அப்போ யாரும் நம்பவில்லை. குட்டிப்புலி படப்பிடிப்பு தளத்திற்கு என் குடும்பத்தினரை அழைத்து வந்தேன். படப்பிடிப்பை பார்த்த என் அப்பா டேய் என்னடா படம் எடுக்குற. நாய் பொழப்பா இருக்கு. பேசாம டீ கடையில் இருந்திருந்தால் நீ ஓனர் சொன்னார். பிறகு குட்டிப்புலி படம் வெளியாகி வெற்றியானதும் முத்தையா அப்பா என எல்லோரும் அவரை அழைத்தனர். அப்போதுதான் அவருக்கு என் மீது நம்பிக்கை வந்தது என முத்தையா தெரிவித்தார்.
பாரதிராஜா, மகேந்திரன் எனது குரு
என் சினிமா வாழ்க்கையில் இயக்குநர் பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோர்தான் எனது மானசீக குருக்கள் என முத்தையா தெரிவித்தார். பின்பு பேசிய அவர், கொம்பன் படத்தில் வரும் முத்தையா கதாப்பாத்திரம் முதலில் கமல் சாரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் நடித்திருந்தால் படத்தின் லெவலே மாறும் என நம்பினேன். அவரை பார்த்து கதை சொல்ல முயற்சித்தேன். அது நடக்கவில்லை. பிறகு ராஜ்கிரன் சார் வந்தார். என் வாழ்வில் நடந்த உண்மையை தான் முத்தையாவாக கொம்பனில் உருவாக்கினேன் என முத்தையா தெரிவித்தார்.
தேவர் மகன் 2 இயக்க ஆசை
மேலும், கமல்ஹாசன் சாரை 3 முறைதான் பார்த்திருக்கிறேன். அவர் அலுவலக காம்பவுண்டிற்குள் செல்ல தயக்கம். அவர் நம்ம தொட முடியாத உச்சம் என இயக்குநர் முத்தையா தெரிவித்தார். பின்பு பேசிய அவர், கொம்பன் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி சார் வந்து என்னை சந்தித்து தேவர் மகன் 2 நீங்கதான் எடுக்கணும் சொன்னார். நான் கொஞ்சம் தயங்கிக் கொண்டே சார் அது எப்படிப்பட்ட படம், தேவர் மகன் 2 நான் எடுத்தா நல்லா இருக்குமா என்று கேட்டேன். கமல் சாருக்கு ஓகே சொன்னால் நான் எடுக்க தயார் என்றும் கூறினேன். நீங்க கவலைப்பட வேண்டாம், எல்லாம் பாசிட்டிவாதான் இருக்கு. கமல் சார் லண்டன் போயிருக்கார். வந்ததும் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன் முரளி சார் சொன்னார்.
கமல் சார் ஓகே என்றால் ரெடி
அதன் பிறகு இதுவரை கதை டிஸ்கஸனில் தான் இருக்கிறது. கமல் சார் இல்லாமல் தேவர் மகன் 2 இல்லை. சக்திவேலுக்கு ஒரு மகள் பிறந்து வளர்ந்தால் எப்படி இருக்கும் என்பது போல கதையை மாற்றலாம். கமல் சாரை வைத்து தேவர் மகன் 2 இயக்குவது என்பது என் வாழ்நாள் கனவு என இயக்குநர் முத்தையா தெரிவித்துள்ளார்.





















