Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தவரும், பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவருமான கே.ராஜன் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையின் அடையாறு ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜன் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
யூடியப் தொலைக்காட்சிகளிலும், திரைப்பட நிகழ்ச்சிகளிலும் சுறுசுறுப்பாகவும், ஆவேசமாகவும் பேசும் தயாரிப்பாளரான ராஜனின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன? என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. 1983ம் ஆண்டு முதல் திரையுலகில் செயல்பட்டு வரும் ராஜன் கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான வருவாயை ஈட்டியுள்ளார்.
அவ்வாறு தான் சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தனக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் ஆகியோர்களுக்கு ராஜன் கடனாக அளித்துள்ளார். அவர் அளித்த கடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது பலரும் அந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால், இவரது குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடன் தொல்லை:
இதனால், தயாரிப்பாளர் ராஜன் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். பின்னர், குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்த ஹோட்டலில் தங்கி வந்த அவர் தற்போது கடன் பிரச்சினையால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை விஸ்வரூபம் அடைந்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு, குறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்காகவும், திரைத்துறையின் பிற துறை நண்பர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் கே.ராஜன். அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கே.ராஜனின் சடலத்தை மீட்டபோது அவரது மூக்கில் நுரை இருந்தது. இதனால், அவர் குதிப்பதற்கு முன்பு விஷம் ஏதும் குடித்து இருந்தாரா? என்றும் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரிய வரும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
">
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















