ஆர்யா நடித்துள்ள அனந்தன் காடு திரைப்படம் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ
Ananthan kaadu review : ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அனந்தன் காடு திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

ஈழப்போர் பின்னணியாக கொண்டு உருவாகி ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் அனந்தன் காடு. ரெஜினா கசாண்ட்ரா , நிகிலா விமல் , இந்திரன்ஸ் , முரளி கோபி , தேவ் மோகன் , சித்திக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அனந்தன் காடு கதை
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்களுடன் படம் தொடங்குகிறது. அந்த இனப்படுகொலையில் தனது குடும்பத்தை இழக்கும் சிறுவன் உயிர் தப்பி, காலப்போக்கில் ஆயுதப் போராளியாக உருவாகிறான். பின்னர் சில காரணங்களால் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வரும் அவன், அங்கு அரசியல் ஆதரவுடன் செயல்படும் உள்ளூர் ரவுடி குழுவினரின் வாழ்க்கையில் இணைகிறான். கிருஷ்ணன்குட்டி தலைமையிலான அந்தக் குழுவில் தங்கராஜ், முரளி, ஜாக்சன் உள்ளிட்டோர் அரசியல்வாதிகளுக்காக கொலை, மிரட்டல் போன்ற சட்டவிரோத செயல்களை செய்து வந்தாலும், வன்முறையை விட்டு சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநல அரசியல், காவல்துறையின் அடக்குமுறை மற்றும் துரோகம் ஆகியவை அவர்களை மீண்டும் ரத்தம் சிந்தும் மோதல்களுக்குள் தள்ளுகின்றன. இதனுடன் ஈழப் போராட்டம், அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு, அதிகார வர்க்கத்தின் சுரண்டல் போன்ற அரசியல் அம்சங்களையும் கதை இணைக்கிறது.
விமர்சனம்
தொடக்கத்தில் பல அடுக்குகளுடன் நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பிறகு பழிவாங்கலை மையமாகக் கொண்ட வழக்கமான ஆக்ஷன் கதையாக மாறுகிறது. சில அரசியல் கருத்துகளும் கதாபாத்திரங்களின் பின்னணியும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும், அவை முழுமையாக ஆராயப்படாமல் மேம்போக்காகவே கடந்து செல்கின்றன. இறுதியில் கதையின் மையம், அதிகாரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் ஒன்றிணைந்து தங்களை பயன்படுத்திய அரசியல் சக்திகளுக்கு எதிராக நடத்தும் பழிவாங்கும் போராட்டமாக மாறுகிறது. அரசியல் த்ரில்லராக தொடங்கிய படம், இறுதியில் வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் ரிவெஞ்ச் டிராமாவாக முடிவடைவதே இந்த படத்தின் முக்கிய பலவீனமாக அமைந்துள்ளது.
நடிப்பு
படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்யா, அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் கொந்தளிக்கும் மனிதனின் மனநிலையை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல்மொழியும், சண்டைக் காட்சிகளுக்கான அர்ப்பணிப்பும் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. அதேசமயம் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் இன்னும் ஆழமான வெளிப்பாடு இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. முரளி கோபி அரசியல் செல்வாக்கு மிக்க கதாபாத்திரத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். இந்திரன்ஸ் அளவான நடிப்பால் சில முக்கியமான காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். தேவ் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை குறையில்லாமல் செய்துள்ளனர். கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சிலருக்கு திரையில் போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக நடிகர்கள் அனைவரும் கதையின் தீவிரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















