6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
மாநிலப் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு ஏஐ குறித்த அடிப்படை அறிவைக் கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்காக 6-ம் வகுப்பு முதலே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கல்வியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், இந்தியாவின் முதல் அரசால் நிர்வகிக்கப்படும் செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகத்தை (AI University) அமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
6-ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி
உலகளவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மாநிலப் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு ஏஐ குறித்த அடிப்படை அறிவைக் கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம், மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன் மேம்படும் என்றும், எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்ப அவர்கள் தங்களைத் முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அரசு கருதுகிறது.
இந்தியாவின் முதல் அரசு ஏஐ பல்கலைக்கழகம்
பள்ளிக் கல்வியோடு மட்டுமின்றி, உயர்கல்வியிலும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நாட்டிலேயே முதல்முறையாக மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் பிரத்யேக 'செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகம்' கர்நாடகாவில் நிறுவப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டார்.
Building an AI-native Karnataka
— DK Shivakumar (@DKShivakumar) July 15, 2026
India’s first government-led AI University in Bengaluru, a dedicated AI Hub, the Karnataka AI Policy, AI education from Class VI, and two Hyperscale Green Data Centres will power the next era of innovation. pic.twitter.com/dX78hLZjeT
இந்த நவீன பல்கலைக்கழகம், ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பிரதான முக்கியத்துவம் அளித்துச் செயல்படும்.
திட்டத்தின் நோக்கம்
பெங்களூரு நகரம் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையமாக (ஐடி ஹப்) திகழும் நிலையில், அந்த அந்தஸ்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இந்த புதிய முன்னெடுப்புகள் உதவும் என கர்நாடக அரசு நம்புகிறது.
கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்விக்கும், தற்போதைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டங்களின் மூலம், தொழில்நுட்பத் துறையில் கர்நாடகா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதுடன், இளைஞர்களுக்கு ஏஐ சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























