அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்-ஷங்கர் கூட்டணி உருவாகலாம் என தகவல். Daredevil, Mankatha 2 படங்களுக்கு பிறகு இப்படம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் இருவரும் முதல் முறையாக இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
டூரிங் டாக்கீஸ் வெளியிட்ட தகவலின்படி, அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் டேர்டெவில் மற்றும் மங்காத்தா 2 ஆகிய படங்களின் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கூட்டணி தொடர்பாக இதுவரை அஜித் தரப்பிலோ அல்லது ஷங்கர் தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அஜித் - ஷங்கர் கூட்டணி
அஜித் மற்றும் ஷங்கர் இருவரும் தமிழ் சினிமாவில் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள். இருவரும் இதுவரை நேரடியாக ஒரு படத்தில் இணைந்ததில்லை. எனவே இந்த கூட்டணி உருவானால் அது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தற்போதைய தகவலின்படி, அஜித் தனது அடுத்தடுத்த படங்களை முடித்த பிறகு ஷங்கருடன் இணையலாம் என தெரிகிறது. குறிப்பாக படத்தின் பட்ஜெட் மற்றும் கதைக்களம் இருவருக்கும் திருப்தியாக அமையும் பட்சத்தில் இந்த கூட்டணி தொடங்கும் என கூறப்படுகிறது.
வேல்பாரிக்கு முன் மற்றொரு படம்
இயக்குநர் ஷங்கர் தற்போது தனது நீண்டகால கனவுப் படமான வேள்பாரி உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சு.வெங்கடேசனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பையும் வசூலையும் பெறாத நிலையில்,வேள்பாரி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக வேள்பாரி படத்திற்கு முன்பாக ஷங்கர் மற்றொரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த திரைப்படமாக அஜித்துடன் அவர் இணையக்கூடும் என்ற தகவலே தற்போது வெளியாகியுள்ளது.
பட்ஜெட் முக்கிய காரணமா?
ஷங்கரின் திரைப்படங்கள் பொதுவாக பிரம்மாண்டமான தயாரிப்பு செலவைக் கொண்டிருக்கும். குறிப்பாக வேள்பாரி கதைக்களத்திற்கு மிகப்பெரிய செட்கள், விஎஃப்எக்ஸ் மற்றும் போர் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேவைப்படும் என்பதால் அதன் பட்ஜெட் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் உடனடியாக வேள்பாரி படத்தில் முதலீடு செய்ய தயங்குவதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாக கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்துடன் உருவாகும் படம் உறுதியானால், ஒருபுறம் ஷங்கருக்கு தனது அடுத்த பெரிய படத்திற்கான தயாரிப்பை மேற்கொள்ள நேரம் கிடைக்கும். மறுபுறம், அஜித்தின் நட்சத்திர மதிப்பு காரணமாக அந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
அஜித் தற்போது டேர்டெவில் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து மங்காத்தா 2 தொடர்பான பணிகளும் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த படங்களை முடித்த பிறகே ஷங்கருடன் அஜித் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்தகட்டத்திற்கு செல்லும் என தகவல் கூறுகிறது. அதேபோல், கதை மற்றும் பட்ஜெட் இரண்டும் இறுதி செய்யப்பட்ட பிறகே இந்த கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















