தொடர் தோல்வி... முருகனிடம் மனமுருகி வேண்டிய நடிகர் சூர்யா.. பழனியில் சாமி தரிசனம்
பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா, இயக்குநர் வம்சி சாமி தரிசனம். 46வது திரைப்படத்தின் கதையை வைத்து சிறப்பு வழிபாடு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஆன்மீக ஸ்தலமாக உள்ளது பழனி முருகன் கோயில். தமிழ்கடவுள் என்றழைக்கப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகவும் பழனி முருகன் கோயில் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய கோயிலாகும். தொடர்ந்து பல்வேறு திருவிழாக்கள் நடந்து வரும் நிலையில், தற்போதும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாகவும், நேர்த்திக்கடன் செலுத்தவும், காவடி எடுத்தும் வந்து செல்கிறனர்.

இதேபோல முருகன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வந்து செல்கின்றனர். சினிமா நடிகர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், சந்தானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட நடிகர்கள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் கூட சுந்தர் சி , குஷ்பூ அவர்களின் 25 வது திருமண நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய பழனி வந்து சென்றனர். அதேபோல கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோயில் வந்துள்ளார்.

அவ்வாறு பல்வேறு புகழ்பெற்ற பழனி முருகன் திருக்கோவிலுக்கு திரைப்பட நடிகர் சூர்யா, இயக்குநர் வம்சி வருகை தந்தனர். ரோப்கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர் காலை 8 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜையில் வேடர் அலங்காரத்தில் சுமார் அரை மணி நேரம் அமர்ந்து வழிபட்டார். நடிகர் சூர்யா நடிக்க உள்ள 46 வது படத்தின் திரைப்படத்தின் கதையை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் போகர் சமாதியில் வழிபட்டு வெளியே வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள், சாமி படங்கள் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். பின்னர் கோவில் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் என அனைவரிடம் சேர்ந்து புகைப்படம் எடுத்தனர். பின்னர் ரோப் கார் வழியாக கீழே இறங்கிய அவர் புறப்பட்டுச் சென்றார்.





















