பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய லெஜண்ட் சரவணன்; மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பாவா லட்சுமணனின் மருத்துவ சிகிச்சைக்காக தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான பாவா லட்சுமணன், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலப் பிரச்சினையின் காரணமாக அவரது கால் விரல்களில் சில அகற்றப்பட்டதாகவும், இதன் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அளித்த உருக்கமான பேட்டியில், ஒரு விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் தன்னால் நடக்க முடியாது என்ற வதந்தி திரைப்படத் துறையில் பரவியதால் வாய்ப்புகள் குறைந்ததாகவும் பாவா லட்சுமணன் கூறியிருந்தார். தற்போது நிரந்தரமாக தங்குவதற்கு வீடு கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பலரும் உதவிக்கரம் நீட்டத் தொடங்கினர். அதில் முக்கியமாக, லெஜண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பது திரையுலகில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட இந்த தொகை, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாவா லட்சுமணனுக்கு உடனடி உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாவா லட்சுமணன் தனது திரைப்பயணத்தில் “மாயி”, “வின்னர்”, “கில்லி”, “திருப்பாச்சி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் இன்றளவும் நினைவுகூரப்படுகின்றன. பல ஆண்டுகளாக மக்களை சிரிக்க வைத்த கலைஞர் இன்று மருத்துவச் செலவுகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது ரசிகர்களை வேதனையடையச் செய்துள்ளது.
பாவா லட்சுமணனுக்கு உதவிய லெஜன்ட் சரவணன் 👏👏👏❤️ pic.twitter.com/VTdwmM1Bf3
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 22, 2026
லெஜண்ட் சரவணன் வழங்கியுள்ள நிதியுதவிக்கு ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பாவா லட்சுமணனின் சிகிச்சைக்காக திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. உடல்நலத்தை மீட்டெடுத்து அவர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















