குட்டு வெளிவந்ததும் அப்பாவியாக நடித்த ரவி மோகன்...மடக்கி கேள்வி கேட்ட மனைவி ஆர்த்தி
நடிகர் ரவி மோகன் ஆர்த்தி ரவி பிரிவுக்கு மூன்றாம் நபரான கெனிஷாவே காரணம் என ஆர்த்தி மோகன் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

இருளை கொண்டு வந்த கெனிஷா
கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது.
ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல.
எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். “உங்கள் வாழ்வின் ஒளி” என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகின்றேன். எனக்குக் ‘கட்டுபடுத்திய மனைவி'என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.என் கணவரை அன்புடன் பராமரித்து, அவருக்குக் கேடு தரும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்துக் கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், அப்படியே இருக்கட்டும்.
எந்த ஒரு உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதைச் செய்வாரோ நானும் அதைத்தான் செய்தேன். ஆனால் அப்படி நடந்து கொள்ளாத பெண்களுக்கு இந்த சமுதாயம் சுமத்தும் அனைத்து கொடூரமான பட்டங்களையும் கணவரின் நலனை காப்பாற்றியும் நான் சுமக்கிறேன்.. இன்னும் சொல்வதென்றால் வாழ்வின் கடினமான சமயங்களில் கூட நாங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக, என் கணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் உடன் அன்புடனே இருந்தோம். எங்கள் சமூக ஊடக பதிவுகளே அதற்குச் சாட்சி. நாங்கள் பிரிவதற்கு முதல் நாள் வரை எங்கள் உறவும் எல்லோருடைய திருமண வாழ்விலும் இருப்பது போல அன்பும்,விவாதமும்,ஆசையும், தற்காலிக கருத்து வேறுபாடுகளும் நிறைந்தது என்று தான் நான் நம்ப வைக்கப்பட்டேன்.
ஜெயம் ரவி போட்ட திட்டம்
தனது சொத்துகளை,கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை.நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து,தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள Range Rover காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்?திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார், அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் வரை காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்?அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வைக் காப்பாற்ற முடியாமல் போனதே .





















