WB Election 2026: மே. வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - 142 தொகுதிகள், பவானிபூரில் மம்தா Vs சுவேந்து
WB Election 2026 2nd Phase Polling: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

WB Election 2026 2nd Phase Polling: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் சுமார் 3 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் - 2ம் கட்ட வாக்குப்பதிவு
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அமைதியான மற்றும் நியாயமான வாக்குப்பதிவை உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 142 சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவில் வாக்களிக்க 3 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர். ஆயிரத்து 228 ஆண்கள், 220 பெண்கள் என மொத்தம் ஆயிரத்து 448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாங்கர் தொகுதியில் அதிகபட்சமாக 19 வேட்பாளர்களும், கோகாட் தொகுதியில் குறைந்தபட்சமாக ஐந்து வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
பவானிபூரில் மம்தா Vs சுவேந்து
மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் இன்று தான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் இருவரும் போட்டியிட்டனர். அதன் முடிவில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு சவால் விடும் விதமாக நந்திகிராமில் மட்டுமின்றி, மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி களமிறங்கியுள்ளார். இதனால் 2021ம் ஆண்டு பெற்ற தோல்விக்கு தனது சொந்த மண்ணில் மம்தா பழிவாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இணைய ஒளிபரப்பு மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன. மொத்தம் 2,321 மத்தியப் படை நிறுவனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, இவற்றில் அதிகபட்ச படைகள் கொல்கத்தாவில் குவிக்கப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் இந்த செயல்முறையை மேற்பார்வையிட 142 பொதுப் பார்வையாளர்கள், 95 காவல் துறைப் பார்வையாளர்கள் மற்றும் 100 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி வாக்குப்பதிவை முடிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மே.4ம் தேதி தேர்தல் முடிவுகள்:
க டந்த 23ம் தேதி 152 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில், மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 93.17 சதவிகித வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. அந்த சாதனையை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முறியடிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், இன்று பதிவாகும் வாக்குகள், முதல் கட்டத்தில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து வரும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு, அடுத்த ஆட்சியாளர் யார் என்பது உறுதி செய்யப்படும். அதே நாளில் தான் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபப்ட உள்ளன.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















