West Bengal Election 2026: மம்தாவுடன் மீண்டும் மல்லுகட்டும் சுவேந்து அதிகாரி..! இந்த முறையாவது வெற்றி பெறுவாரா பானர்ஜி?
மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் தன்னைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரிக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் மம்தா பானர்ஜி இந்த முறை வெற்றி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

West Bengal Assembly Election 2026: இந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலமான மேற்கு வங்கத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி மற்றும் ஏப்ரல் 29ம் தேதி நடக்கிறது.
மேற்கு வங்கத் தேர்தல்:
இந்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் தக்க வைப்பதற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக-வும் களத்தில் இறங்குகின்றனர். கிழக்கிந்தியாவின் பாஜக-விற்கு மிகப்பெரிய அளவில் சவால் தரும் ஒரு கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது.
இந்த தேர்தலில் 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேரடியாக களமிறங்குகிறது. 3 தொகுதிகளில் பாரதிய கோர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் களமிறங்குகிறார்.
மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி:
இந்த தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு போட்டியாக அதே தொகுதியில் அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி களமிறங்குகிறார். இதனால், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளைக் காட்டிலும் இவர்கள் இருவரில் வெற்றி பெறப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், மம்தா பானர்ஜி தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் இரண்டையும் சேர்த்து 11 முறைப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதில் அவர் 1989ம் ஆண்டு தனது அரசியலில் ஆரம்ப காலத்தில் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன்பின்பு, முதலமைச்சராக பதவியை அலங்கரித்த அவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரைத் தோற்கடித்த பெருமை இந்த சுவேந்து அதிகாரிக்கே சேரும்.
சவால்தரும் சுவேந்து:
55 வயதான சுவேந்து அதிகாரி தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரசில் தொடங்கினார். பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 2006ம் ஆண்டு எம்எல்ஏவாக சேர்ந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய ஆளாக உருவெடுத்து 2009, 2014, 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
பின்னர், மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஆதரவாளர்களுடன் பாஜக-வில் இணைந்தார். பின்னர், மேற்கு வங்க பாஜகவில் முக்கிய பொறுப்பேற்றார். இவரது வருகைக்கு பிறகு கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக அந்த தேர்தலில் 77 இடங்களைப் பிடித்தது.
மேலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மம்தா பானர்ஜியை விட 1, 956 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மம்தா பானர்ஜி 1 லட்சத்து 8 ஆயிரத்து 808 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால், சுவேந்து அதிகாரி 1 லட்சத்து 10 ஆயிரத்து 764 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி யாருக்கு?
மேற்கு வங்கத்தில் பாஜக கடந்த 5 ஆண்டுகளில் பெரியளவு வளர்ச்சி அடைந்திருப்பதால், இந்த சட்டமன்ற தேர்தலில் பவானிபூர் தொகுதியில் வெற்றி பெறப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பவானிபூர் தொகுதி மம்தா பானர்ஜியின் கோட்டையாகவே உள்ளது. மம்தா பானர்ஜி 2011ம் ஆண்டு இடைத்தேர்தல் மூலமாக முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றது இதே பவானிபூர் தொகுதியில் இருந்தே ஆகும். 2016ம் ஆண்டும் இதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் நந்தி கிராம் தொகுதியில் தோல்வி அடைந்த பிறகு மீண்டும் இடைத் தேர்தலில் இதே பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்றே முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்தார்.
தற்போது மம்தா பானர்ஜியின் கோட்டையிலே அவரை சுவேந்து அதிகாரி எதிர்கொள்வதால் வெற்றி யாருக்கு? என்ற பெரிய எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.




















