West Bengal Election 2026: 152 தொகுதிகள்! மேற்கு வங்கத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் - மம்தாவா? பாஜக-வா?
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அசாம், பாண்டிச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்காளம் மாநிலத்திலும் நாளை முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு:
மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 152 தொகுதிகளில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவிலே பதற்றமான மாநிலங்களில் மேற்கு வங்கமும் உள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சுமார் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்களும், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். 3ம் பாலினத்தவர்கள் 465 பேர் ஆவார்கள்.
வேட்பாளர்கள்:
மொத்தம் 16 மாவட்டங்களில் இந்த முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 1478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 100 சதவீத வெப் கேமரா மூலம் இந்த வாக்குப்பதிவை கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜக-வும் நேருக்கு நேர் மோதும் இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 450 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவிற்காக சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகள்:
மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. இவர்களில் 294 வேட்பாளர்கள் மீது மிகவும் தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளது. 98 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது. 19 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளது.
பதற்றங்கள் நிறைந்த மாவட்டங்களான மால்டா, முர்ஷிதாபாத், உத்தர் தினாஜ்பூர், கூச்பேகர், பிர்பும், புர்த்வான் மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த பிறகு 2வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை:
இதையடுத்து, சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற அசாம், பாண்டிச்சேரி, கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களது வேட்பாளர்கள் மிகவும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளிலும் நேற்று மாலையே தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றது. தற்போது தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















