Thirumavalavan: கமல் முடிவு சரியில்ல.. திமுக இதை செய்யணும்.. திருமாவளவன் பரபரப்பு அறிக்கை!
தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என திமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மக்கள் நீதி மய்யம் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. திமுக உதயசூரியன் சின்னத்தின் போட்டியிட விருப்பமில்லை எனவும் அதுதொடர்பான விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு கட்சிக்கு அங்கீகாரம் பெற மக்கள் நீதி மய்யத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கமலின் முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பலரும் வரவேற்றனர்.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள நான்கு பக்கம் கொண்ட அறிக்கையில், “திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இப்படியான நிலையில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. நான்கு சதவீத அளவிலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர் கமல்ஹாசன்.
தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி நாம் இயங்கி வருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும்.
இந்த கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான்.
கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.
தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும்.
இந்த நெருக்கடியான சூழலில் தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து. கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என திருமாவளவன் கூறியுள்ளார்.




















