TN Election: ரோடே இல்லாத மலைக்கிராமம்! குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!
தேனியில் சாலையே இல்லாத மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு குதிரைகள் மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்கான வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புகளுடன் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
மலைக்கிராமம்:
பல இடங்களில் கரடு முரடான சாலைகள், சவாலான மலைப்பகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக அந்த பகுதிகளிலே வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி இன்று நடந்தது.
குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
போடி நகராட்சி பகுதிகளில் உள்ள 83 வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 121 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.
தமிழக கேரளா எல்லை பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் கிராமங்கள் குரங்கணி, கொட்டகுடி, காரிப்பட்டி, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் டாப் ஸ்டேஷன் ஆகியவை. இந்த பகுதி போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த மலைவாழ் கிராமங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.
75 வாக்காளர்கள்:
இதில் சென்ட்ரல் டாப் ஸ்டேஷன் மலைப்பகுதியில் சுமார் 75 வாக்காளர்கள் வசிக்கின்றனர். ஆனால், இந்த பகுதி செங்குத்தான மலைப் பகுதி என்பதால் இங்கு வாகனங்கள் செல்வது இயலாத ஒன்றாகும். இதனால், இந்த வாக்குச்சாவடிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டது.
போடிநாயக்கனூரிலிருந்து குரங்கணி வரை சுமார் 16 கிலோமீட்டர் வேனில் கொண்டு முதலில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சென்ட்ரல் மலைக்கிராமத்திற்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவை நடத்தும் தேர்தல் அலுவலர்கள் மலைப்பகுதியில் நடந்து சென்றே தேர்தல் பணிக்கு சென்றனர்.
இந்த காலத்திலும் கழுதை, குதிரை:
கடந்த ஆண்டு முதுவாக்குடி சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முதுவாக்குடி மலை கிராமத்திற்கு தற்போது கல் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.
இந்தியா 5 ஜி தொழில்நுட்பத்தை கடந்து அடுத்த தொழில்நுட்பத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கும் சூழலிலும், தமிழ்நாடு தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இருக்கும் சூழலிலும் இன்றும் தமிழ்நாட்டில் பல வாக்குச்சாவடி மையங்களுக்கு குதிரைகளிலும், கழுதைகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
போடி மெட்டு மலை கிராமத்தில் சுமார் 200 வாக்காளர்கள் உள்ள நிலையில் அங்கு ஒரு வாக்கு சாவடி உள்ளது. இது தவிர குரங்கணி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏழு வாக்குப்பதிவு மையங்களுக்கு இன்று வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.
Nayeem Moosa: தவெக தலைவர் விஜயின் தளபதி, நிழல், 365 டிகிரி பாதுகாவலன்- யார் இந்த நயீம் மூஸா?
ட்ரெண்டிங் செய்திகள்



















